திடீர் விசா ரத்து.. டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த சர்வதேச மாணவர்கள்!

International Students Sue US DHS | அமெரிக்காவில் படித்து வரும் 4 சர்வதேச மாணவர்களின் விசாக்கள் அமெரிக்க அரசால் ரத்து செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். எந்தவித முறையான விளக்கமும் இன்றி விசா ரத்து செய்யப்பட்டதாக அந்த மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திடீர் விசா ரத்து.. டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த சர்வதேச மாணவர்கள்!

டொனால்ட் டிரம்ப்

Published: 

17 Apr 2025 11:46 AM

அமெரிக்கா, ஏப்ரல் 17 : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் (American President Donald Trump) தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்தார். அதில் மிக முக்கியமான மற்றும் இந்தியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டது தான் சட்டவிரோத குடியேறிகளை (Illegal Immigrants) நாடு கடத்தும் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் இந்தியர்கள் மட்டுமன்றி அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஏராளமான வெளிநாட்டவர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தி வந்தது. இந்த நிலையில், இந்திய மாணவர் ஒருவர் உள்ளிட்ட 4 மாணவர்களின் விசாவை ரத்து செய்ததாக டிரம்ப் அரசின் மீது பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

டிரம்ப் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து 4 சர்வதேச மாணவரகள்

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பொது பல்கலைக்கழகத்தை (University of Michigan) சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் உள்ளிட்ட 4 மாணவர்களின் விசாவை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனமான DHS (US Department of Homeland Security) -க்கு எதிராக புகார் அளித்துள்ளனர். இது குறித்து கூறியுள்ள அவர்கள் எந்த வித முறையான அறிவிப்பும், விளக்கமும் இன்றி தங்களது விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இந்த மாணவர்கள் ACLU (American Civil Liberties Union) அமைப்பால் பிரதிநிதித்துவம் படுத்தப்படுகிறார்கள். இந்த நிலையில், விசா ரத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மாணவர்கள் தங்களது படிப்பை முடித்ததும் தாங்கள் தடுப்பு காவல் மற்றும் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்ளாமல் இருக்க தங்களின் நிலையை மீண்டும் நிலைநிறுத்துமாறு இந்த வழக்கு நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறது என்றும் ACLU தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

சர்வதேச மாணவர்களை பாதிக்கும் விசா ரத்து

மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்களுக்கு விசா ரத்து செய்யப்பட்டதற்கான முறையான காரணம் வழங்கப்படவில்லை என்றும், அவர்கள் எந்த சட்ட போராட்டங்களிலோ, விதி மீறல்களிலோ ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், அவர்கள் அமெரிக்காவில் எந்த வித குற்றத்திற்கும் குற்றம் சாட்டப்படவில்லை என்றும் எந்த ஒரு தவறுக்காகவும் அவர்கள் தண்டனை பெறவில்லை என்றும் கூறியுள்ளது. இதெயெல்லாம் விட அவர்கள் எந்த வித குடியேற்ற சட்டத்தையும் மீறவில்லை என அந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.