இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு விசா தடை – சவுதி அரேபியா அதிரடி – என்ன காரணம்?
Saudi Arabia Temporarily Halts Visas : சுவுதி அரேபியாவில் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு விசா வழங்க இடைக்கால தடை விதித்திருக்கிறது. ஹஜ் யாத்திரை நெருங்குவதால் முறையான முன்பதிவு இல்லாமல் யாத்திரை செல்பவர்களை தடுக்கவே இந்த தடையை அந்நாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக உம்ரா விசா வைத்திருப்பவர்கள் ஏப்ரல் 13 வரை சவுதி அரேபியாவிற்கு பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது.

பொருள் ஈட்டுவதற்காக மக்கள் உலக அளவில் இடம் பெய்ந்து வருகிறார்கள். இந்தியாவிலிருந்து மலேசியா (Malaysia), சிங்கப்பூர், துபாய், சவுதி அரேபியா (Saudi Arabia) போன்ற நாடுகளுக்கு தொழிலாளர்கள் அதிக அளவில் வேலைக்கு செல்கின்றனர். இங்கே சிவில் இன்ஜினியர், எலக்ட்ரீசியன் போன்றோருக்கு கிடைக்கும் சம்பளத்தை விட அங்கு பல மடங்கு அதிகம் என்பதால் பலரும் அங்கே வேலைக்கு செல்கிறார்கள். அப்படி சில வருடம் அங்கே பணி செய்துவிட்டு வந்தால் நம் வாழ்க்கை தரம் உயரும் என்ற நம்பிக்கையில் குடும்பத்தை விட்டு அங்கே பணி செய்து வருகிறார்கள். ஆனால் அப்படி செல்பவர்களுக்கு பெரும்பாலும் கடுமையான பணி சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். அப்படி செல்பவர்கள் விசா உள்ளிட்ட நடைமுறைகளுக்கு சில லட்சங்கள் வரை செலவிட நேரிடுகிறது.
இந்த நிலையில் சுவுதி அரேபியாவில் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு விசா வழங்க இடைக்கால தடை விதித்திருக்கிறது. ஹஜ் யாத்திரை நெருங்குவதால் முறையான முன்பதிவு இல்லாமல் யாத்திரை செல்பவர்களை தடுக்கவே இந்த தடையை அந்நாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக உம்ரா விசா வைத்திருப்பவர்கள் ஏப்ரல் 13 வரை சவுதி அரேபியாவிற்கு பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது.
விசா தடைக்கான காரணம்?
முறையான அனுமதி இல்லாமல் அளவுக்கு அதிகமானாோர் உம்ரா விசா, வணிக விசா மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் நுழைந்து ஹஜ் யாத்திரை செல்லும் நிலையில், கூட்டம் நெரிசல் ஏற்படுவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டன், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, ஏமன், மொரோகோ ஆகிய நாடுகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் பயணம் தவிர்த்து வணிக விசா, குடும்ப விசா, உம்ரா விசா ஆகிய விசாக்களை பெற்று வரும் பிற நாட்டு மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள சட்ட விரோதமாக சவுதி அரேபியாவில் தங்கிவிடுகின்றனர் என்பதால் இதுபோன்ற சிக்கல்களைத் தடுக்க இந்தத் தடையை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. இந்தத் தடை வருகிற ஜூன் மாதம் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஹஜ் பயணத்தின் போது நடந்த சோக சம்பவம்
கடந்த 2024 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தின் போது கூட்ட நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வருடம் அப்படி அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக சவுதி அரேபிய அரசு பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி ஹஜ் பயணத்திற்காக மக்கள் சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருப்பதை தவிர்ப்பதற்காகவே இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேற்கண்ட நாடுகளில் இருந்து அதிக அளவிலான மக்கள் ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியா வருவதன் காரணமாக குறிப்பிட்ட அந்த நாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.