ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு பஸ் டிக்கெட்டுடன் வந்த பேண்ட் – அதிர்ச்சி சம்பவம்
Zepto Delivers Wrong Order: ஜெப்டோவில் புதிய ட்ராக் பேண்ட் ஆர்டர் செய்தவருக்கு, அதற்கு பதிலாக பழைய ட்ராக் பேண்ட் ஒன்று கிடைத்தது. அதில் ஜெய்ப்பூர் பஸ்ஸின் டிக்கெட்டும் 10 ரூபாய் நாணயமும் இருந்தது. இந்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் தங்கள் அதிருப்தியை பகிர்ந்து வருகின்றனர்.

மாதிரி புகைப்படம்
இன்றைய காலகட்டத்தில் கடைக்கு சென்று பொருட்களை வாங்குவது கூட நேரம் விரயமாக பார்க்கப்படுகிறது. அனைத்தையும் ஆன்லைனில் (Online) ஆர்டர் செய்து வாங்கி பழக்கப்பட்டிருக்கிறோம். ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றன. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் இப்போது ஆஃப்லைனில் குறைவாகவும், ஆன்லைனில் அதிகமாகவும் ஷாப்பிங் (Shopping) செய்கிறார்கள். இருப்பினும், ஆன்லைன் ஷாப்பிங்கின் போது சில சுவாரசியமான சம்பவங்களும் நடக்கின்றன. சிலருக்கு டெலிவரி ஊழியர் அளிக்கும் பாக்ஸில் வெறும் செங்கல் இருந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் இங்கே ஒரு வாடிக்கையாளருக்கு நடந்திருக்கிறது. இதைப் பார்த்த பிறகு, நீங்கள் ஒரு கணம் ஆன்லைன் ஷாப்பிங் பற்றி யோசிப்பீர்கள்.
சமீப காலமாக மக்களுக்கு ஏகப்பட்ட ஷாப்பிங் ஆப்கள் இருக்கின்றன. ஒரு பொருள் வாங்கும்போது பல ஆப்களில் அதன் விலையை ஆராய்ந்து எதில் குறைவாக இருக்கிறதோ அதனை தேர்ந்தெடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், இந்த ஆன்லைன் தளங்களால் வாடிக்கையாளர்களுக்கு சில மோசமான அனுபவங்களும் ஏற்படுகின்றன. இந்த நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் ஜெப்டோவில் (ZEPTO) இருந்து தனக்காக ஒரு டிராக் பேன்ட்டை ஆர்டர் செய்ததிருக்கிறார். ஆனால், அவரது வீட்டிற்கு வந்தது அவர் எதிர்பார்க்காத ஒன்று.
ஆன்லைனில் பேண்ட் ஆர்டர் செய்தவருக்கு நேர்ந்த கதி
தனது கதையைப் ரெடிட் தளத்தில் பகிர்ந்துகொண்ட அந்த நபர், தான் ஜெப்டோவிலிருந்து டிராக் பேண்ட்டை ஆர்டர் செய்ததாகவும், அதில் பத்து ரூபாய் நோட்டு மற்றும் ஜெய்ப்பூர் பேருந்தின் டிக்கெட்டைக் கண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்த பேன்ட் அழுக்காக இருந்தது, ஆனால் அதை வாங்கிய பிறகு எனக்கு ரூ. 10 லாபம் கிடைத்தது என்று நகைச்சுவையாக குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு மக்களிடையே வைரலான நிலையில், பயனர்கள் பலரும் அதற்கு கருத்து தெரிவிப்பதன் மூலம் தங்கள் எதிர்வினைகளைத் தெரிவிக்கத் தொடங்கினர். மேலும் இது சமூக ஊடகங்களில் பகிரப்பட இந்த விஷயம் வைரலாகியது.
ஒரு பயனர் நீங்கள் இதனுடன் ஒரு SURF EXCEL சேர்த்து ஆர்டர் போட்டு புதியதாக மாற்றிக்கொள்ளுங்கள் என கலாய்த்திருக்கிறார். மற்றொருவர் ஒரு ஷாப்பிங் தளம் தனது வாடிக்கையாளர்களுக்கு இதை எப்படிச் செய்ய முடியும் என்று எழுதினார். இப்படி பலரும் தங்கள் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதே போன்று பெங்களூரில் உள்ள தம்பதியர், அமேசானில் Xbox கன்ட்ரோலர் ஆர்டர் செய்தனர். பார்சலை திறந்தபோது, அதில் உயிருள்ள பாம்பு இருந்தது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, அமேசானின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுந்தன.
இந்த சம்பவங்கள் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தரம், பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை குறித்த முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. இந்த வகையான சம்பவங்களைத் தவிர்க்க, நிறுவனங்கள் தங்களின் செயல்முறைகளை மேம்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களும் ஆர்டரைப் பெற்றபின் உடனடியாக சரிபார்த்து, ஏதேனும் தவறுகள் இருந்தால் உடனடியாக புகார் செய்ய வேண்டும்.