Gmail : ஜிமெயிலில் உருவெடுத்த புதிய வகை மோசடி.. பயனர்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை!
New Gmail Scam Alert | கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இது மிகவும் பாதுகாப்பான செயலியாக கருதப்பட்டாலும் அதில் அவ்வப்போது சில சிக்கல்கள் மற்றும் மோசடிகள் நடைபெறும். அந்த வகையில் தற்போது ஒரு புதிய வகை மோசடி உருவெடுத்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் கூகுள் (Google) நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail) செயலியை பயன்படுத்துகின்றனர். ஜிமெயில் செயலி பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும் அதில் அவ்வப்போது சில மோசடி (Scam) சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், ஜிமெயில் செயலியில் தற்போது புதிய வகை மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது. இந்த மோசடி மூலம் தகவல் திருடப்படுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், இதில் இருந்து பாதுகாப்பாக இருக்க நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், ஜிமெயில் செயலியில் அரங்கேறிவரும் இந்த புதிய மோசடி குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஜிமெயில் செயலி
கூகுள் நிறுவனம் பல வகையான செயலிகளை பயன்பாட்டில் வைத்துள்ளது. கூகுள் க்ரோம், கூகுள் மேப், கூகுள் போட்டோஸ் என பல அம்சங்களை கொண்டுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த ஜிமெயில் செயலி. கூகுளின் இந்த ஜிமெயில் செயலி தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாக உள்ளது. விரைவாக மற்றும் பாதுகாப்பாக தகவல் பரிமாற்றம் செய்துக்கொள்ள பெரும்பாலான மக்கள் இதனை தேர்வு செய்கின்றனர். தனிநபர்கள் மட்டுமன்றி, சில நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள ஜிமெயில் செயலியை பயன்படுத்துகின்றன. அதுமட்டுமன்றி, பொதுமக்களும், நிறுவனங்களும் அதில் தரவுகளையும் சேமித்து வைக்கின்றனர்.
ஜிமெயில் செயலியில் உருவெடுத்துள்ள புதிய மோசடி
ஜிமெயில் செயலி, இத்தகைய சிறப்பு வாய்ந்தது மற்றும் பாதுகாப்பானதாக கருதப்படும் நிலையில், அதி அவ்வப்போது சில மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. அதாவது சமீபத்தில் ஜிமெயில் செயலியில் சிலருக்கு கூகுள் நிறுவனத்திடம் இருந்து வருவதை போல மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலுக்கு பதில் அளிக்க வேண்டாம் என கூறப்படுவதாகவும், அதில் பயனர்களின் கூகுள் கணக்கில் சில சிக்கல்கள் உள்ளதாகவும் அதனை சரிசெய்ய லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என கூறப்படுவதாகவும் பயனர்கள் சிலர் கூறியுள்ளனர்.
அவ்வாறு ஜிமெயில் செயலிக்கு வரும் அந்த மோசடி மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளதை போலவே, அதில் கொடுப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்தால் தகவல் திருடப்படுதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அச்சு அசல் கூகுள் நிறுவனத்திடம் இருந்து வருவதை போலவே அந்த மின்னஞ்சல்கள் தோன்றுவதால், அதனை போலி என கண்டு பிடிப்பதே சவாலாக இருக்கும் என சிலர் கூறுகின்றனர். எனவே பயனர்கள் தங்களுக்கு வரும் இத்தகைய மோசடி மின்னஞ்சல்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும், எந்த காரணத்தை கொண்டும் அத்தகைய மின்னஞ்சல்களில் கொடுக்கப்படும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.