குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு.. எப்போது? விண்ணப்பிக்கும் தேதி என்ன? முழு விவரத்தை வெளியிட்ட TNPSC!
TNPSC Group 4 Exam 2025 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2025 ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் 3,935 இடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த தேர்வுக்கு ஏப்ரல் 25ஆம் தேதியான இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

சென்னை, ஏப்ரல் 25 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு (TNPSC Group 4 exam) 2025 ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் 3,935 இடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுக்கு 2025 ஏப்ரல் 25ஆம் தேதியான இன்று முதல் மே 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது.
குரூப் 4 தேர்வு எப்போது?
ஆண்டுதோறும் தேர்வு நடத்தி காலிப் பணியிடங்களி நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2,2ஏ, குரூப் 4 என பல கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளுக்கு லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த குரூப் 4 தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு மூலம் தட்டச்சர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், வனக் காப்பாளர், கள உதவியாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காவலர், நேர்முக எழுத்தனர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 2025ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வின் மூலம் 3,935 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எனவே, 2025ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
— TNPSC (@TNPSC_Office) April 25, 2025
குரூப் 4 தேர்வுக்கு 2025 ஏப்ரல் 25ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் அவகாசம் 2025 மே 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு 2025 மே 29ஆம் தேதி 12 மணி முதல் 2025 மே 31ஆம் தேதி இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவுடன் அதற்கான நகலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தகுதிகள்:
மேற்கண்ட பணிகளுக்கு கல்வித்தகுதி, வயது விவரம் போன்றவற்றை அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு 21 முதல் 42 வயதிற்குள் இருக்க வேண்டும். வனப் காப்பாளர், எழுத்தர், நேர்முகத் எழுத்தர், வனக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 21 முதல் 37 வயது வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், கல்வித்தகுதி என்பது அந்தந்த பதவிக்கு ஏற்ப மாறுபடும். எனவே https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் இருக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.