Tamil Nadu Rainfall: தமிழ்நாட்டில் வெயில் மறையும்! மழை பொழியும்.. அடுத்த சில நாட்களுக்கான வானிலை அப்டேட்..!
Tamil Nadu Weather Update: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கோடை கால வானிலை தொடர்கிறது. ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வடதமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், அடுத்த ஏழு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு
சென்னை, ஏப்ரல் 21: தமிழ்நாடு (Tamil Nadu) மட்டுமின்றி இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட கோடை காலம் தொடங்கிவிட்டது. இதனால், நாள்தோறும் வெப்ப நிலை உள்ளிட்ட சில வானிலை மாற்றங்கள் (Weather) நிகழ்ந்து வருகிறது. பகல் முழுவதும் கடும் வெயில் அடித்தாலும், மாலை நேரங்களில் சில இடங்களில் மேக மூட்டம் அல்லது மழை பெய்கிறது. அந்தவகையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை பற்றி தெரிந்து கொள்வோம். கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழ்நாடு மற்றும் வட தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை (Rain) பெய்துள்ளது. அதேபோல், வடதமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 40.2° செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 23.0° செல்சியஸும் பதிவாகியுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி ஏனைய தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் எந்தவொரு மாற்றம் இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37–40° செல்சியஸும், தென்தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 34–36° செல்சியஸும், வடதமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35–38° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 21–28° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், 2025 ஏப்ரல் 21ம் தேதியான இன்றும், 2025 ஏப்ரல் 22ம் தேதியான நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2025 ஏப்ரல் 23ம் தேதி முதல் 2025 ஏப்ரல் 27ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
வெப்ப நிலையில் மாற்றமா..?
2025 ஏப்ரல் 21ம் தேதியான இன்று முதல் 2025 ஏப்ரல் 25ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், 2025 ஏப்ரல் 21ம் தேதியான இன்று முதல் 2025 ஏப்ரல் 25ம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
2025 ஏப்ரல் 22ம் தேதியான நாளை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் 2025 ஏப்ரல் 21ம் தேதியான இன்று முதல் 2025 ஏப்ரல் 25ம் தேதி வரை கடலுக்கு செல்வதற்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.