Annamalai: பிரதமர் மோடிக்காக அரசியல்! எதை சொன்னாலும் செய்வேன்.. உறுதியுடன் பேசிய அண்ணாமலை..!

Tamil Nadu New BJP President: தமிழ்நாடு பாஜக-வின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பிரதமர் மோடி கிணற்றில் குதிக்க சொன்னாலும் குதிப்பேன், அவர் கை காட்டுவதை எல்லாம் செய்வேன். பிரதமர் மோடி சொல்லும்போது கண்களை மூடிக்கொண்டு செயல்படுத்துவது மட்டும்தான் என் வேலை என்று தெரிவித்துள்ளார்.

Annamalai: பிரதமர் மோடிக்காக அரசியல்! எதை சொன்னாலும் செய்வேன்.. உறுதியுடன் பேசிய அண்ணாமலை..!

பிரதமர் மோடியுடன் அண்ணாமலை

Published: 

11 Apr 2025 22:13 PM

சென்னை, ஏப்ரல் 11: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் பதவிக்கு (Tamil Nadu New BJP President) பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் இன்று அதாவது 2025 ஏப்ரல் 11ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். தற்போது தலைவராக இருக்கும் அண்ணாமலைதான் (Annamalai) நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) பெயரை முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. மாநில தலைமையகத்துடனான பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தி.நகரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இந்தப் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ஒரே உறுப்பினர் நயினார் நாகேந்திரன் என்பதை தெரிவித்தார். இதுகுறித்து, அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான வேட்புமனு நயினார் நாகேந்திரனிடம் இருந்தே பெறப்பட்டுள்ளது.

அமித் ஷா வெளியிட்ட பதிவு:

தமிழ்நாடு பாஜக பிரிவின் தலைவராக அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். அதில், பிரதமர் மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலை ஜியின் பங்களிப்பு முன்னோடியில்லாதது. கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலை ஜியின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும்” என்றார்.

திருநெல்வேலியை சேர்ந்த எம்.எல்.ஏவும், தற்போதையை மாநில துணை தலைவருமான நயினார் நாகேந்திரன் முன்பு அதிமுகவில் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலையை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜஸ் உள்ளிட்டோரும் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை முன்மொழிந்ததாக கட்சி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தமிழ்நாடு மாநில தலைவர் பதவி குறித்து பேசிய அண்ணாமலை, “நான் கட்சியை பார்த்தோ, கட்சியின் சித்தாந்தத்தை பார்த்டோ அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கவில்லை. பிரதமர் மோடிக்காக மட்டுமே அரசியலுக்குள் வந்தேன். பிரதமர் மோடி கிணற்றில் குதிக்க சொன்னாலும் குதிப்பேன், அவர் கை காட்டுவதை எல்லாம் செய்வேன். பிரதமர் மோடி சொல்லும்போது கண்களை மூடிக்கொண்டு செயல்படுத்துவது மட்டும்தான் என் வேலை.

பிரதமர் மோடி என்னை தொண்டனாக இருக்க சொன்னாலும் இருப்பேன். அவர் எந்த கட்டுப்பாட்டை விதித்தாலும் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு பணி செய்யவே வந்தேன், இப்போதும் அது தொடரும்” என்றார்.