“நன்றி அப்பா.. போய் வாருங்கள்” குமரி அனந்தன் மறைவுக்கு தமிழிசை இரங்கல்!
Kumari Ananthan Passes Away: தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் காலமானார். இவரது மறைவுக்கு தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். நன்றி அப்பா.. போய் வாருங்கள் என உருக்கமாக கூறியுள்ளார். தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை. தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

சென்னை, ஏப்ரல் 09: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் (Kumari Ananthan Passes Away) 2025 ஏப்ரல் 09ஆம் தேதி அதிகாலையில் காலமானார். சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னையால் சிசிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இவரது மறைவுக்கு தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“நன்றி அப்பா.. போய் வாருங்கள்”
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை. தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் அவர்கள் இன்று என் அம்மாவோடு இரண்டர கலந்து விட்டார். குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு தமிழிசை என்ற பெயர் வைத்து இசை இசை என்று கூப்பிடும் என் அப்பாவின் கணீர் குரல் இன்று காற்றில் இசையோடு கலந்து விட்டது.
வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சீரான வாழ்க்கை வாழ்ந்தவர். இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம் சீராக வாழ்வதைக் கண்டு பெருமைப்பட்டு வாழ்த்திவிட்டு எங்களை விட்டு மறைந்திருக்கிறார் என்றும் அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில் பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்.
மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா. நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ. அதை மனதில் கொண்டு. உங்கள் பெயரில் நாங்கள் செய்வோம் என்று உறுதியோடு உங்களை வழி அனுப்புகிறோம்.
குமரி அனந்தன் மறைவுக்கு தமிழிசை இரங்கல்
உங்கள் வழி உங்கள் வழியில் நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல… நாமும் மகிழ்ச்சியாக இருந்து. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும். என்று உங்கள் ஆசை ஆசையை. எப்போதும் நிறைவேற்றுவோம். போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன். நன்றி அப்பா.
மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்” என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார். குமரி அனந்தன் உடல் சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின் வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் கட்டி பிடித்து தமிழிசை கதறி அழுந்துள்ளார்.
தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரானவர் குமரி அனந்தன். தீராத தமிழ் பற்று கொண்ட இவர், பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், காமராஜருடன் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. இவர், 1977 ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராக நாகர்கோவிலில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அனந்தன் ஐந்து முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.