வாட்டி வதைக்கும் வெயில்.. 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை மையம் தகவல்!
Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் வெப்பநிலை கடுமையாக இருக்கும் நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னை, ஏப்ரல் 16: தமிழகத்தில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. பல்வேறு இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால், மக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்வதற்கு கஷ்டமாக உணருகிறார்கள். இன்னும் மே ஜூன் மாதங்களில் வெப்பநிலை கடுமையாக உயரும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
வாட்டி வதைக்கும் வெயில்
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, 2025 ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025 ஏப்ரல் 16ஆம் தேதியான இன்று அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்புகள் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பொறுத்தவரை 2025 ஏப்ரல் 16ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 15, 2025
அதே நேரத்தில் தமிழகத்தில் மழைக்கும் வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழக்ததில் 2025 ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஈரோடு மாவட்டத்தில் 38.6 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் பரமத்யில் 16.5 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், வட தமிழக உள் மாவட்டங்களில் 33 டிகிரி செல்சியஸ், தென் மாவட்டங்களில் 37 டிகிரி செல்சியஸ், மலைப் பகுதிகளில் 21 முதல் 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் வரும் நாட்களில் வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.