வாட்டி வதைக்கும் வெயில்.. 4 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னை, ஏப்ரல் 25: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை உயரும் (Tamil Nadu Heatwave Alert) எனவும் 2 முதல் 4 டிகிரி வரை செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தி எடுக்கிறது. 2025 மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால், மக்கள் வெளியே செல்வதற்கு சிரமப்படுகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. சென்னையிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது.
வாட்டி வதைக்கும் வெயில்
அக்னி வெயில் மே 4ஆம் தேதி தொடங்கும் நிலையில், இப்போதே வெயில் படுத்தி எடுக்கிறது. இன்னும் வரும் நாட்களில் வெப்ப அலை கூட வீசலாம் என கூறுகின்றனர். இந்த நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.
அதாவது, 2025 ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2025 ஏப்ரல் 26ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 2025 ஏப்ரல் 25ஆம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்.
4 டிகிரி வரை வெப்பநிலை உயரும்
Maximum temperatures over Tamilnadu, Puducherry & Karaikalhttps://t.co/uGUQb6KNbM pic.twitter.com/h9YkYALbTw
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 24, 2025
அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என கணித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 40.1 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 23 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. அதே நாடு முழுவதும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2025 ஏப்ரல் 30ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் வெப்பநிலை அலை வீசும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர், தெலுங்கானா, மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் எனவும் இதனால் அந்த மாநிலங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.