அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலை ரத்து.. மீண்டும் சிக்கலில் அமைச்சரவை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
I. Periyasamy's Asset Case: தமிழ்நாடு அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றம் வழங்கிய விடுதலை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2006-2010 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது, அவர் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்ததை அடுத்து, உயர்நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. 6 மாதத்தில் வழக்கு முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஐ.பெரியசாமி
சென்னை, ஏப்ரல் 28: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டை சேர்ந்த அமைச்சர்கள் முக்கிய வழக்குகளிலும், சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றனர். கடந்த 27ம் தேதி அதாவது நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்தது. முக்கிய துறைகளில் அமைச்சர்களாக இருந்த பொன்முடி (Ponmudy) மற்றும் செந்தில் பாலாஜி (Senthil Balaji) பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களது முக்கிய இலாகாக்கள் மற்ற ஒருசில அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழ்நிலையில், மற்றொரு அமைச்சர்கள் தொடர்பான விஷயமும் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில், அமைச்சர் ஐ. பெரியசாமி (I. Periyasamy) மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு:
தமிழ்நாட்டில் முக்கிய அமைச்சர்களின் ஒருவரான அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது மனைவி, மகன்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுவித்து உத்தரவிட்டது. இந்தநிலையில், ஐ.பெரியசாமி மற்றும் அவர்களது குடும்பத்தினரை விடுவித்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.
2006 -2010ம் ஆண்டு வரை கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் ஐ. பெரியசாமி வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தார். அப்போது, ஐ. பெரியசாமி 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமைச்சர் ஐ. பெரியசாமி அவரின் மனைவியான சுசீலா, ஐ. பெரியசாமியின் மகனும், தற்போதைய பழனி திமுக சட்டமன்ற உறுப்பினருமான பி.செந்தில்குமார், மற்றொரு மகனான பி.பிரபு மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடந்த 2012ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேல்முறையீடு:
இந்த வழக்கானது கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், ஐ. பெரியசாமி உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் உத்தரவு விடப்பட்டது. தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அமைச்சர் ஐ. பெரியசாமி உள்பட விடுவிக்கப்பட்ட 4 பேர் மீதான உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்தநிலையில், அமைச்சர் ஐ. பெரியசாமி அவரின் மனைவியான சுசீலா, மகன்களான செந்தில்குமார், பி.பிரவு உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு எதிராக
குற்றச்சாட்டு பதிவு செய்து தினந்தோறும் விசாரணை செய்து ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.