“பதற வேண்டாம்” பாஜக அதிமுக கூட்டணி.. முதல்வருக்கு நயினார் பதிலடி!
Nainar Nagendran : அதிமுக பாஜக கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். பதற்றம் வேண்டாம் என்றும், தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது என்றும் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

சென்னை, ஏப்ரல் 13: அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக) பாரதிய ஜனதாக கட்சி (பாஜக) இடையே கூட்டணி (AIADMK BJP Alliance) ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிமுக பாஜக கூட்டணி குறித்து 2025 ஏப்ரல் 12ஆம் தேதியான நேற்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) பதிலடி கொடுத்துள்ளார். பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்று முதல்முறையாக திமுகவை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாஜக அதிமுக கூட்டணி
அதில், “நம்மைப் பார்த்து பொருந்தாக் கூட்டணி என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள். ஆம்.. இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான்.
ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும்
முதல்வர் ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது இந்த கூட்டணிதான்.
தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே. இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது.
இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும் பதற்றம் வேண்டாம். ஐயா ஸ்டாலின் அவர்களே.. இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள். ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
முதல்வருக்கு நயினார் பதிலடி
நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள்!
ஆம்! இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான்!
ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும் @mkstalin-இன் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது!
இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை…
— Nainar Nagenthiran (@NainarBJP) April 13, 2025
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், தேர்தலில் வெற்றி பெறவில்லை. இதனால், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான், தங்களால் வெற்றி பெறவில்லை என்றும் இதனால் இனி எந்த சூழலிலும் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார்.
இதற்கிடையில், ஜெயலலிதா, எம்ஜிஆர் குறித்தும் அப்போது பாஜக தலைரவாக இருந்த அண்ணாமலை இழிவாக பேசியதாக தெரிகிறது. இதனால், அதிமுக பாஜகவுக்கு கடுமையான மோதல் ஏற்பட்டது. எனவே, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்ற நிலையில் அதிமுக இருந்தது.
இப்படி சொல்லிக் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார். இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.