தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு
Tamil New Year Celebration: 2025 ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் பஞ்சாங்க வாசிப்பு நடைபெற்றது. பிள்ளையார்பட்டி, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கோயில்களில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக அன்னதானம், மருத்துவம் உள்ளிட்ட சிறப்புவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தமிழ்நாடு ஏப்ரல் 14: தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை (Tamil New Year) ஒட்டி கோயில்களில் பக்தி மயமான சிறப்பு வழிபாடுகள் (Prayers In Temples) நடைபெற்றன. தமிழர் பண்பாட்டு மரபின் அடையாளமாகிய சித்திரை மாதத்தின் முதல் நாளான தமிழ் புத்தாண்டு, 2025 ஏப்ரல் 14 ஆம் தேதி இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் ஆனந்தமாக கொண்டாடப்படுகிறது. அதிகாலை முதலே தமிழகம் முழுவதிலும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. புதிய புடவை, பசுமை மற்றும் பாரம்பரிய உணவுகளுடன் மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்றனர். கோவில் வளாகங்களில் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், பக்தர்கள் அவற்றை ரசித்து மகிழ்ந்தனர். தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசாமி கோவிலில் காலை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. அதேபோல், கரூர் மாரியம்மன் கோவிலிலும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகமெங்கும் கோயில்களில் சிறப்பு பூஜைகள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் 2025 ஏப்ரல் 14 ஆம் தேதி இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முக்கிய கோயில்களில் சிறப்பு அலங்காரம், பூஜை, அபிஷேகம், பஞ்சாங்க வாசிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டியில், புகழ்பெற்ற கற்பகவிநாயகர் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 9 மணிக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
பஞ்சாங்கம் வாசிப்பு மற்றும் ரிஷப வாகன சேவை
மாலை 6 மணிக்கு, பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், மூஷிக வாகனத்தில் கற்பகவிநாயகர், ரிஷப வாகனத்தில் சந்திரசேகர் மற்றும் கவுரி அம்மன் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் சிறப்பு ஆராதனையுடன் எழுந்தருளல் நிகழ்வு நடந்தது.
பக்தர்களுக்கான சிறப்பு வசதிகள்
பக்தர்களுக்காக அன்னதானம், குடிநீர், மருத்துவ வசதி, நிழல் மற்றும் மேற்கூரைகள், கார் பார்க்கிங் வசதி போன்ற பல சிறப்புவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை கோவில் பரம்பரை டிரஸ்டிகள் நற்சாந்துபட்டி குமரப்பன் செட்டியார், காரைக்குடி சித. பழனியப்பன் செட்டியார் ஆகியோர் செய்துள்ளனர்.
விவேகானந்தபுரத்தில் வெங்கடாஜலபதி கோவிலில் விசு கனி தரிசனம்
கன்னியாகுமரி, விவேகானந்தபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலில் 2025 ஏப்ரல் 14 ஆம் தேதி இன்று அதிகாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்ரபாத தரிசனம் மற்றும் சித்திரை விசு கனி காணும் நிகழ்வு நடைபெற்றது. இரவு 8 மணி வரை பக்தர்களுக்காக சர்வதரிசனம் அனுமதிக்கப்படுகிறது. திருப்பதியில் இருந்து 7,000 லட்டுகள் கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூரில் உள்ள பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றன. குறிப்பாக, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், இன்று அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
புத்தாண்டை ஆன்மிக உற்சாகத்துடன் வரவேற்கும் வகையில், பலரும் தங்களது குடும்பத்துடன் பயபக்தியுடன் கோவிலுக்கு வருகை தந்தனர். இதனால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்து ஆனந்தம் பெற்றனர்.