தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…வெயிலும் கொளுத்தும்…!!
Tamilnadu Weather: 2025 ஏப்ரல் 22 முதல் 27 வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்; வெப்பநிலை இயல்பை விட 2°–3°C அதிகரிக்கும். மே 4 முதல் கத்திரி வெயில் தொடங்கி, வெப்பம் மேலும் கூடியிருக்கலாம்; மே மாத மழைப்பொழிவு 25mm–87mm வரை இருக்கலாம். மாற்றமடையும் வானிலையால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்துகிறது.

சென்னை ஏப்ரல் 22: தமிழகத்தில் (Tamilnadu Weather) 2025 ஏப்ரல் 22 முதல் 27 வரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு (Rain alert) உள்ளது. இதே நேரத்தில், வெப்பநிலை 2°–3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் (chennai) மேகமூட்டத்துடன் அதிகபட்சம் 37°C வரை வெப்பம் பதிவாகலாம். 2025 மே 4 முதல் கத்திரி வெயில் தொடங்கும் நிலையில், வெப்பநிலை மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் சில நாட்கள் மழைக்கும் வாய்ப்பு உள்ளதுடன், மொத்த மழைப்பொழிவு 25mm முதல் 87mm வரை இருக்கலாம். வெயிலும், மழையும் மாறி மாறி வந்தால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மாறி மாறி மழையும் வெயிலும்… மக்கள் அவதி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக, ஒருபுறம் கொளுத்தும் வெயிலும், மறுபுறம் லேசான மழையும் மாறி மாறி பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பலர் தினசரி நடவடிக்கைகளில் சிக்கலுக்கு ஆளாகின்றனர்.
ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 27 வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2025 ஏப்ரல் 22 இன்று முதல் ஏப்ரல் 27 வரை தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தென்னிந்தியாவிலுள்ள வளிமண்டல கீழடுக்கு பகுதி மற்றும் கிழக்கு–மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதிகள் இந்த மழைக்கு காரணமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வெப்பநிலை இயல்பை விட உயர்வு
அதே நேரத்தில், 2025 ஏப்ரல் 22 முதல் 24 வரை, தமிழகத்தின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2°–3° செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சம் 37° செல்சியஸ், குறைந்தபட்சம் 28°–29° செல்சியஸ் வரை இருக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை பதிவுகள்
தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில், விருதுநகர் சிவகாசியில் 5 சென்டி மீட்டர் கோவையின் வால்பாறையில் 4 சென்டி மீட்டர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சில பகுதிகளில் 2–3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மே மாதத்தில் கத்திரி வெயில் தொடங்குகிறது
2025 மே 4ம் தேதி முதல் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் தொடங்கும். இது 2025 மே 29 வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. இந்த காலத்தில் தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும். கடந்த ஆண்டுகளில் இந்தக் காலப்பகுதியில் 113°F (சுமார் 45°C) வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டும் அதேபோல் அதிக வெயில் இருக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மே மாத வானிலை முன்னறிவிப்பு
இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட நீண்டகால முன்னறிவிப்பின்படி, 2025 மே மாதத்தில் தமிழ்நாட்டில் சராசரி வெப்பநிலை 34.3°C முதல் 36.4°C வரை இருக்கும். மொத்த மழைப்பொழிவு சுமார் 25mm முதல் 87mm வரை இருக்கலாம். மொத்தம் 7 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது.
மாவட்டங்களுக்கு வெப்பம் அதிகரிப்பு எச்சரிக்கை
சேலத்தில் 2025 ஏப்ரல் 21 நேற்று 102°F, வேலூரில் 101°F வரை வெப்பம் பதிவு செய்யப்பட்டது. சென்னையிலும் மேகமூட்டத்துடன் இருந்தபோதும் வெப்பநிலை 100°F (37°C) வரை உயர்ந்தது.
மக்களுக்கு ஆலோசனை
வெயிலின் தாக்கம் மற்றும் மாற்றமடையும் வானிலை காரணமாக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டு உள்ளது.