PMK Internal Dispute: பாமகவில் பிரச்சனையே இல்லை.. சரியாகிவிட்டது! சட்டப்பேரவை வளாகத்தில் ஜிகே மணி பேட்டி!
PMK Honorary President GK Mani: பாமகவின் 2025 மே 11ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள மாநாடு குறித்து பேசிய ஜிகே மணி, உட்கட்சிப் பூசல்கள் தீர்வு கண்டதாகவும், அன்புமணி ராமதாஸ் தலைவராகத் தொடர்வதாகவும் தெரிவித்தார். மேலும், மாநாட்டு மேட்டையில், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஒன்றாக அமருவார்கள் என்றும் தெரிவித்தார்.

சென்னை, ஏப்ரல் 15: கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் உள்ள தனது தைலாபுரம் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாமன நிறுவனர் ராதமாஸ் (S. Ramadoss), “2026 ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு கட்சி தலைவராக நான் பொறுப்பேற்று அன்புமணி ராமதாஸை கட்சியின் செயல் தலைவராக நியமிக்கிறேன்” என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) பாமக பொதுக்குழுவில் தன்னை தொண்டர்கள் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள், அதனால் தான் தொடர்ந்து தலைவராக செயல்படுவேன்” என்றார். அதன்படி, பாமக பொருளாளர் திலகபாமா, அன்புமணி ராமதாஸூக்கு ஆதரவாகவும், பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராணவனன், நிறுவனர் ராமதாஸூக்கு ஆதாரவாகவும் பேசினர். இது உட்கட்சி விவகாரமாக உருவெடுத்தது. இந்தநிலையில், பாமக கட்சியில் நிலவி வந்த உட்கட்சி விவகாரம் முடிவுக்கு வந்ததாக பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
ஜி.கே.மணி பேட்டி:
15.4.2025 இன்று பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி தலைமையில் சட்டமன்றத்திற்கு சென்றபோது… pic.twitter.com/PpfrwTwH6u
— G.K.Mani (@PmkGkm) April 15, 2025
இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் பேசிய பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது, “சித்திரை மாதம் என்பது வசந்த காலம். அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வருகின்ற 2025 மே 11ம் தேதி மாமல்லபுரத்தில் மாநாடு நடத்த இருக்கிறோம். பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் ஒரு தனித்துவமான கட்சி, தனி கொள்கை கொண்ட கட்சி. மருத்துவர் அய்யா வழிநடத்தி வந்த கட்சியில் இன்று ஒரு சிறிய சலசலப்பு. இப்போது நன்றாக போய்கொண்டு இருக்கிறது.
மருத்துவர் அய்யா அவர்களும், சின்ன அய்யா அவர்களும் என இரு தலைவர்களும் மாநாட்டில் ஒன்றாக ஒரே மேடையில் அமருவார்கள். பாமகவில் நிலவி வந்தது பிரச்சனையே கிடையாது. அது ஒரு சின்ன சலசலப்பு. குறைந்துவிட்டது, சரியாகிவிட்டது. அது மேலும் பெரியதாகாது” என்று தெரிவித்தார்.
பாமக கட்சி உருவானது எப்படி…?
முன்னதாக, பாமக எப்படி உருவானது என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர், ”1980ம் ஆண்டு நான் மருத்துவராக பணியாற்றியபோது, வன்னியர் சங்கத்தை (பாமகவின் தாய்ப் பிரிவை தொடங்கினேர். 1987ம் ஆண்டு சாலை மறியல் போராட்டங்களின்போது 21 பேரை இழந்தேன். இதை தொடர்ந்து, 1989ம் ஆண்டு நான் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினேன். மாநிலம் முழுவதும் 95,000 கிராமங்களை சென்று மக்களை சந்தித்தேன். வன்னியர்களுக்கான எம்பிசி இடஒதுக்கீட்டை உறுதி செய்தேன். உள்ளாட்சி அமைப்புகளின் அடிமட்டத்தில் இருந்து மத்திய அமைச்சர் பதவிகள் வரை கட்சி பதவிகளை பெற்றது. இவை அனைத்தும் எனது சாதனைகள்” என்று தெரிவித்தார்.