அண்ணாமலை புயலாக இருந்தால், நான் தென்றலாக இருப்பேன்.. நயினார் நாகேந்திரன் பேச்சு!
Nainar Nagendran Speech After Oath | தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 4 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பொறுப்பேற்ற பிறகு அவர் தொண்டர்கள் மத்தியில் பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை, ஏப்ரல் 12 : தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக பாடுபட வேண்டும் என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவராக பதவியேற்ற அவர், நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். இந்த நிலையில் , மாநில தலைவராக பதவியேற்ற பிறகு நயினார் நாகேந்திரன் தொண்டர்கள் மத்தியில் பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாஜக புதியன் மாநில தலைவராக பதவியேற்ற நயினார் நாகேந்திரன்
ஏப்ரல் 12, 2025 அன்று பாஜக மாநில தலைவர் தேர்தல் நடைபெறும் என கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள், ஏப்ரல் 11, 2025 அன்று பாஜக தலைமை அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றைய (ஏப்ரல் 11, 2025) தினம் நயினார் நாகேந்திரனை தவிர வேறு யாரும் வேட் மனு தாக்கல் செய்ய வரவில்லை. இதன் காரணமாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரன், புதிய பாஜக மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 12, 2025) சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் புதிய பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாஜகவின் வளர்ச்சிக்கு இதற்கு முன் இருந்த தலைவர்களே காரணம். என் மக்கள் யாத்திரை மூலம் தமிழக முழுவதும் அண்ணாமலை பயணம் செய்து இந்த கோபுரத்தை கட்டி முடித்து, மேல் களசம் அமைத்துள்ளார். நமது வேலை அதற்கு கும்பாபிஷேகம் மட்டும் தான் செய்ய வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் அதனை நடத்தப் போகிறோம் என்று கூறியுள்ளார்.
அண்ணாமலை புயலாக இருந்தால், நான் தென்றலாக இருப்பேன் – நயினார் நாகேந்திரன்
தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் 2026 தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் கூறியுள்ளார். வரும் தேர்தலில் நான்கு தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம், அதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வளவு பெரிய காட்சியில் பெரிய பொறுப்பை தந்து உள்ளீர்கள். அதனை பொறுப்பாக எடுத்து செயல்பட வேண்டும் என்றால் கூட பயமும் அச்சமும் உள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பு உள்ளிட்ட அனைத்து விஷயத்திலும் அண்ணாமலையின் பாணி தனி, என்னுடைய விஷயம் வேறு. அவர் புயலாக இருந்தால் நான் தென்றலாக தான் இருக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.