நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை.. பேரவையில் விரக்தியுடன் பேசிய அமைச்சர் பிடிஆர்!

IT Minister Palanivel Thiagarajan Speech in Tamil Nadu Assembly | தனது துறைக்கு போதிய நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என்று தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பேசியுள்ளார். கடலூர் சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை.. பேரவையில் விரக்தியுடன் பேசிய அமைச்சர் பிடிஆர்!

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published: 

21 Apr 2025 14:05 PM

சென்னை, ஏப்ரல் 21 : தனது துறைக்கு நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என்று தழிழ்நாடு தொழில்நுட்ப துறை (Tamil Nadu Information Technology Department) அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். கடலூரில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க அரசு முன்வருமா என கடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இவ்வாறு கூறியுள்ளார். இதனால் அவையில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், சபாநாயகர் அப்பாவு அமைச்சருக்கு முறையாக பதில் அளிக்க அறிவுரை வழங்கினார். இந்த நிலையில், சட்டப்பேரவையில் அமைச்சர் பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மூன்று நாட்களுக்கு பிறகு இன்று கூடிய சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்கள் சட்டப்பேரவை செயல்படாத நிலையில், இன்று (ஏப்ரல் 21, 2025) மீண்டும் சட்டப்பேரவை தொடங்கியது. அதன்படி, இன்று (ஏப்ரல் 21, 2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மீதான மானிய கோரிக்கை நடைபெறும், அது தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளிப்பார் என்றும் கூறப்பட்டது.

அதன்படி, காலை வழக்கம்போல சட்டப்பேரவை தொடங்கிய நிலையில், அலுவல் நடவடிக்கைகள் தொடங்கின. அப்போது, கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசீலன், தனது தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்க ஒரு சிறு தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. யாரிடம் நிதியும், அதிகாரமும் இருக்கிறதோ அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன் என்று கூறினார்.

அமைச்சருக்கு அறிவுரை வழங்கிய சபாநாயகர்

சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சரின் பதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்த நிலையில், அவையில் சற்று குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, உறுப்பினர்களின் கேள்விக்கு பாசிடிவாக பதில் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அறிவுரை வழங்கினார். அமைச்சரின் இந்த பேச்சு காரணமாக அவர் விரக்தியில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கருத்துக்களை முன்வைத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.