Celestial Event: வானில் தோன்றும் பிங் நிலவு.. கொடைக்கானலில் சிறப்பு ஏற்பாடு.. எப்படி பார்ப்பது?
Pink Moon & Jupiter Conjunction: 2025, ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் தேதி கொடைக்கானலில் இருக்கும் வான் இயற்பியல் மையம் சார்பில் வானில் தோன்றும் பிங் நிலவு மற்றும் வியாழன் கோளை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை காண மக்கள் முன் பதிவு செய்யலாம் என்றும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

கொடைக்கானல், ஏப்ரல் 8: கொடைக்கானலில் வரும் 2025, ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் தேதி இரவில் வான்வெளி அண்டத்தை மக்கள் காண, வான் இயற்பியல் மையம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வானில் தோன்றும் நிலவு மற்றும் வியாழன் கோள்களை மக்கள் காண இரண்டு நாட்கள் மாலை 7 மணி முதல் 9 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர். அண்டத்தில் தினசரி ஏதேனும் ஒரு வானியல் நிகழ்ச்சி ஏற்படும். அதனை அனைத்தும் நம்மால் பார்க்க முடியாது. ஆனால், ஒரு சில நிகழ்ச்சிகள் நம்மால் கண்டு களிக்க முடியும்.
பிங் நிலவு (Pink Moon):
சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பிற கோள்கள் பூமிக்கு அருகில் தோன்றுவது போன்ற வானியல் நிகழ்ச்சிகளை மக்களால் காண இயலும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் பல்வேறு வானியல் நிகழ்ச்சிகள் தோன்ற உள்ளது. 2025, ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி பிங் நிலவு தோன்ற உள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிங் நிலவு என்பது பிங் நிறத்தில் தோன்றுமா என்றால், அப்படியெல்லாம் இல்லை. இந்த பெயர் அமெரிக்கா மரபிலிருந்து பெறப்பட்டது. இது சூப்பர் மூன் போல் மிகப்பெரியதாக இல்லாமல் சிறியதாகவும் சற்று மங்களாகவும் இருக்கும். இதனை பாஸ்கல் நிலவு என்றும் அழைப்பார்கள்.
வியாழன் கோள்:
சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு கோள்களும் சுரியனை சுற்றி நீள் வட்டப்பாதையில் சுற்றி வரும். அப்படி சுற்றி வரும் போது ஒரு புள்ளியில் பூமிக்கு மிக அருகில் தோன்றும். வியாழன், செவ்வாய், வெள்ளி போன்ற கோள்கள் அவ்வப்போது ஒரே நேர்கோட்டில் வரும் வானியல் நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு, இதனை ஏராளமான மக்கள் கண்டு ரசிப்பார்க்ள். அந்த வகையில் 2025, ஏப்ரல் மாதம் 11 மற்றும் 12 ஆம் தேதி பிங் நிலவு தோன்றுவதுடன் வியாழன் கோளும் தோன்றும். இது ஒரு பிரகாசமான நட்சத்திரமாக வானில் பார்க்க முடியும்.
வான் இயற்பியல் மையம் சார்பில் சிறப்பு ஏற்பாடு:
அந்த வகையில் வரும் 2025, ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் தேதி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த வானியல் நிகழ்ச்சியை கண்டு களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா பயணம் மேற்கொள்கின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் காரணத்தினால் வானியல் நிகழ்ச்சியை காணும் வகையில் கொடைக்கானல் வான் இயற்பியல் மையம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை மாலை 7 மணி முதல் 9 மணி வரை இந்த நிகழ்ச்சியை மக்கள் காண ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்வினை காண மக்கள் முன் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.