புதிய பாஜக மாநில தலைவராக பதவி ஏற்றார் நயினார் நாகேந்திரன்!
Nainar Nagendran Took Oath as State President | பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவருக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (ஏப்ரல் 11, 2025) நடைபெற்ற நிலையில், நயினார் நாகேந்திரனை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை, ஏப்ரல் 12 : பாரதிய ஜனதா கட்சியின் (BJP – Bharatiya Janata Party) புதிய மாநில தலைவராக பதவி ஏற்றார் நயினார் நாகேந்திரன். சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் புதிய மாநில தலைவராக பதவி ஏற்றுள்ளார். இந்த நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் புதிய பாஜக மாநில தலைவராக பதவியேற்றுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாஜகவின் புதிய மாநில தலைவராக தேர்வான நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணியாக இணைந்து களம் கண்ட நிலையில், அந்த கூட்டணி தேர்தலுக்கு பிறகு முறிவடைந்தது. இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக மீண்டும் கூட்டணி அமைக்கும் என எதிர்ப்பாக்கப்பட்டது. ஆனால் முன்னாதாக பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலைக்கும், அதிமுகவினருக்கும் மோதல் போக்கு நிலவியதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாஜக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு அரசிய களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்றுவதற்காக பணிகளை பாஜக மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், புதிய பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் ஏப்ரல் 10, 2025 அன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரே வேட்பாளராக இருந்த நயினார் நாகேந்திரன் ஒருமனதாக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
புதிய பாஜக மாநில தலைவராக பதவியேற்ற நயினார் நாகேந்திரன்
#WATCH | Chennai, Tamil Nadu: BJP MLA Nainar Nagendran elected as the president of Tamil Nadu BJP unit; former state unit president K Annamalai congratulates him pic.twitter.com/YsELg2UECW
— ANI (@ANI) April 12, 2025
மாநில தலைவராக உறுதிமொழி ஏற்ற நயினார் நாகேந்திரன்
இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் பதவி ஏற்பதற்காக சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் உறுதி மொழியை வாசித்து நயினார் நாகேந்திரன் பதவியேற்ற நிலையில், அதற்கான சான்றும் அவருக்கு மேடையில் வைத்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.