போட்டியின்றி தேர்வானார் நயினார் நாகேந்திரன்… பாஜக மாநில தலைவராக நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Nainar Nagendran: தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2025 ஏப்ரல் 12 வானகரத்தில் நடைபெறும் விழாவில் வெளியாகும் என தெரிகிறது. தென் மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தேர்வு, பாஜக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

போட்டியின்றி தேர்வானார் நயினார் நாகேந்திரன்... பாஜக மாநில தலைவராக நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாஜக மாநில தலைவராக நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Updated On: 

11 Apr 2025 19:09 PM

தமிழ்நாடு ஏப்ரல் 11: பாரதிய ஜனதா கட்சியின் (Bharatiya Janata Party) தமிழக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran elected as Tamil Nadu state president) போட்டியின்றி தேர்வாகியுள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2025 ஏப்ரல் 12 நாளை வானகரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிடப்படும். விழாவில் கிஷன் ரெட்டி, தருண்சுக் உள்ளிட்டோர் அறிவிப்பை வெளியிட, 1700க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் அவரது தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது. அதிமுகவில் இருந்த அவர், 2017ல் பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இளைஞர்கள் ஈர்ப்பு, திமுகவுக்கு எதிரான வலுவான ஆட்சி, கூட்டணியமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு

பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலுக்காக வேட்பு மனுவை நயினார் நாகேந்திரனே ஒருவரே தாக்கல் செய்திருந்ததால், அவர் எந்தவிதமான போட்டியின்றியும் தேர்வாகியுள்ளார்.

வானகரத்தில் நடைபெறும் அறிவிப்பு விழா

2025 ஏப்ரல் 12 ஆம் தேதி நாளை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள இந்த விழாவில், பாஜக மூத்த தலைவர்கள் அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். மேலும், 1700க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைமை சார்பில் மாநில தலைவர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கிஷன் ரெட்டி மற்றும் தருண்சுக் ஆகியோர் அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.

புதிய தலைவர் மீது உள்ள எதிர்பார்ப்புகள்

நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக தேர்வானது, தமிழக அரசியல் சூழலில் முக்கிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. தென் மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில், அவர் இந்த பதவிக்கு வந்தது தென் தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது.

இவர், முதலில் எம்ஜிஆரால் அரசியலில் ஈர்க்கப்பட்டு, அதிமுகவில்தான் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த பின்னர், 2017ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

நயினார் நாகேந்திரன் பாஜகவில் உயர்வு, எதிர்கால சவால்கள்

பாஜகவில் இணைந்ததிலிருந்து சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற குழுத் தலைவர் என பன்முக பொறுப்புகளை வகித்தவர் தற்போது மாநில தலைவராக உயர்ந்திருக்கிறார். கட்சிக்குள் இருக்கும் மூத்த தலைவர்களின் ஆதரவைப் பெற்று, ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டிய கட்டாயமும் அவருக்கு உள்ளது. தமிழகத்தில் நிலையான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அவர் முக்கிய பங்கு வகிக்க வேண்டியிருக்கிறது.

இளைஞர் ஈர்ப்பு, கூட்டணி அமைப்பு

திமுகவை கடுமையாக எதிர்க்கும் பேச்சு மற்றும் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டியுள்ள நிலையில், பாஜகவில் இளைஞர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக, பாஜக தலைமையில் ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கி, அதில் சிறந்த வெற்றியை பெறுவதற்கான வேலைபாடுகளும் அவரது தலைமைக்குள் இருக்கும் முக்கியப்பணிகளாகும். தேசிய கட்சி என்ற வகையில், மத்திய தலைமையின் வழிகாட்டுதலோடு இணைந்தே நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.