Tamil Nadu Assembly Election 2026: சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா..? சிவனை உதாரணம் சொன்ன சீமான்!
Seemaan on 2026 Tamil Nadu Assembly Elections: 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். எந்தக் கூட்டணியிலும் இணையப் போவதில்லை என்றும், அவர்கள் அரசியல் வியாபாரம் செய்ய வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல்களில் பெற்ற வாக்குகள் அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதாகவும், புதிய வியூகத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தனித்துப் போட்டியிடும் முடிவு, அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
கடலூர், ஏப்ரல் 21: 2026 சட்டமன்ற தேர்தலை (2026 Assembly Election) எதிர்கொள்ளும் வகையில், பல முக்கிய கட்சிகள் இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் மதசார்ப்பற்ற கூட்டணிக்கு தலைமை தாங்கும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தது. இந்தநிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக புதிதாக பதவியேற்ற நயினார் நாகேந்திரன், சீமான் (Seeman) தலைமையிலான நாம் தமிழர் கட்சி பாஜக- அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும், கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிட்டு வந்தது. இந்தநிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்குமா இல்லையா என்பது குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கூட்டணி வைக்கிறதா நாம் தமிழர் கட்சி..?
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு கடலூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ நாம் தமிழர் கட்சி இதுவரை சந்தித்த தேர்தல்களில் பணம் கொடுத்து இவ்வளவு வாக்குகளை பெறவில்லை. அதுவே, எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 4 மாதங்கள் தானே உள்ளது, பொறுந்திருந்து பாருங்கள் என் ஆட்டம் எப்படி என்று..? சிவன் ஆட்டத்தை இதுவரை பார்த்து இருப்பீர்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் இனி சீமான் ஆட்டத்தை பார்ப்பீர்கள்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேறு மாதிரியா வியூகங்கள் மற்றும் நுட்பங்களை வகுத்து, ஆட்சிக்கு வந்து பூமியின் சொர்க்கமாக என் தாய் நாடான தமிழ்நாட்டை மாற்றுவேன். உலகத்தின் தலைசிறந்த நாடாக தமிழ்நாடு மாறும். இதை நான் செய்து காட்டுவேன். ஒரு கட்டத்தில் நான் சொல்வது சரியாக தானே இருக்கிறது என்று நினைப்பீர்கள். அன்று, என்னை நீங்கள் ஆதரிப்பீர்கள், எல்லாத்தையும் சொல்ல முடியாது. ஏனென்றால், நான் ஒன்று சொன்னால் அதை ஆட்சியாளர்கள் செய்துவிடுகிறார்கள். என்னமோ அவர்களாகவே, தானாக யோசித்த மாதிரி!
தனித்து போட்டி:
அன்பு சோலை என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியது எங்கள் தலைவர் பிரபாகரன்தான். ஈழபோரில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளை பாதுகாக்க அன்பு சோலை உருவாக்கப்பட்டது. இப்போது தமிழ்நாடு அரசு வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் அன்பு சோலை என்ற வார்த்தை உள்ளது. இவ்வளவு காலம் தமிழ்நாடு அரசு என்ன செய்தது, இப்போது அரசாணையில் தமிழ் வார்த்தையை பயன்படுத்துகிறது. நாம் தமிழர் கட்சியின் பலம் மற்றும் பலவீனம் தெரிந்ததால் எங்களின் போர் முறையை மாற்ற உள்ளோம்.
5வது முறையாக தனித்து போட்டியிட போகிறோம். எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவது இல்லை. நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அல்ல, கூட்டணி வைத்து வெற்றி பெற்றவர்கள் எல்லாம் என்ன செய்து விட்டார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.