தமிழகத்தை உலுக்கிய ஆணவ கொலை வழக்கு.. 22 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
Murugesan-Kannagi Honour Killing Case | கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே சாதி எதிர்ப்பு திருமணம் செய்த முருகேசன் - கண்ணகி தம்பதி காதில் விஷம் ஊற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கடலூர் சிறப்பு நீதிமன்றம் ஏறகனவே தீர்ப்பு வழங்கிய நிலையில், உச்ச நீதிமன்றம் அதனை இன்று உறுதி செய்துள்ளது.

டெல்லி, ஏப்ரல் 28 : தமிழகத்தை உலுக்கிய முருகேசன் – கண்ணகி ஆணவ கொலை (Murugesan – Kannagi Honour Killing Case) வழக்கில் கொலை குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை (Lifetime Imprisonment) உச்ச நீதிமன்றம் (Supreme Court) உறுதி செய்துள்ளது. 22 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற முருகேசன் – கண்ணகி கொலை வழக்கில் 2021 ஆம் ஆண்டு கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், அப்போது கொலை குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 28,2025) உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், காதல் ஜோடி கொலைசெய்யப்பட்டது எப்படி, இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தண்டனை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காதில் விஷம் ஊற்றில் கொலை செய்யப்பட்ட முருகேசன் – கண்ணகி தம்பதி
2003 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே சாதி எதிர்ப்பு திருமணம் செய்த கண்ணகி மற்றும் முருகேசன் ஆகிய தம்பதி ஆணவ படுகொலை செய்யப்பட்டனர். விருதாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் முந்திரிக்காடு பகுதியில், முருகேசன் மற்றும் கண்ணகி தம்பதி காதில் விஷம் ஊற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பம் தமிழகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி கொலை செய்யப்பட்ட கண்ணகியின் அண்ணன் மருது பாண்டியனுக்கு தூக்கு தண்டனையும் கண்ணகியின் தந்தை உள்ளிட்ட 12 கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றவாளிகளுக்கு தூக்கு மற்றும் ஆயுள் தண்டனை வழங்கிய சிறப்பு நீதிமன்றம்
ஆனால சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், கண்ணகியின் அண்ணன் மருது பாண்டியனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அப்போது ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி கண்ணகியின் தந்தை உள்ளிட்ட 12 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கந்தவேல், ஜோதி, மணி ஆகிய தண்டனை குற்றவாளிகள் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை இன்று (ஏப்ரல் 28, 2025) விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், கண்ணகியின் அண்ணன், தந்தை உள்ளிட்ட 13 பேருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 22 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஆணவ கொலைக்கு இன்று தீர்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.