NEET : ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி.. சட்டப்பேரவையில் அனல் பறந்த நீட் விவாதம்!

MK Stalin Vs Edappadi Palaniswami | மூன்று நாட்களுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று (ஏப்ரல் 21, 2025) தொடங்கியது. அப்போது நீட் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

NEET : ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி.. சட்டப்பேரவையில் அனல் பறந்த நீட் விவாதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி

Updated On: 

21 Apr 2025 16:43 PM

சென்னை, ஏப்ரல் 21 : தமிழக சட்டப்பேரவைவில் (Tamil Nadu Assembly) இன்று (ஏப்ரல் 21, 2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அந்த வகையில் நீட் (NEET – National Entrance Eligibility Test) விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கார சார விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருக்கு இடையே நடைபெற்ற விவாதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு கூடிய சட்டப்பேரவை

ஈஸ்டர் பண்டிகையை முன்னிடு தொடர் மூன்ற நாட்கள் விடுமுறையை அடுத்து இன்று (ஏப்ரல் 21, 2025) தமிழக சட்டப்பேரவை கூடியது. இந்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன், திமுக கூட்டணி இருந்தபோது தான் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்த திமுக அதனை நிறைவேற்றியதா, யாரை ஏமாற்ற இந்த நாடகம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் விவகாரம் தொடர்பாக வாக்குறுதி கொடுத்தீர்களே என்று கேட்கிறீர்கள். அதனால்தான் சிக்கல் வந்தத்து என்கிறீர்கள். இப்போது அந்த சிக்கலை தீர்த்து வைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என்று உங்களால் சொல்ல முடியுமா என்று பதில் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர்

தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்தது உண்மை தான். அதை நாங்கள் மறுக்கவில்லை. எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நாங்கள் அதனை நிச்சயம் செய்திருப்போம். இந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் கூட்டணி என அறிவிப்பீர்களா என தான் கேள்வி எழுப்புவதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், இரண்டு மாதங்களுக்கு முன் 2026 மட்டுமல்ல 2031-ம் பாஜகவின் கூட்டணியில் இருக்க மாட்டோம் என சொல்லிவிட்டு இப்போது கூட்டணி வைத்துள்ள பழனிச்சாமி, யாரை ஏமாற்ற இந்த நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.