மதுரை சித்திரை திருவிழா.. அழகர் பயணமும் முக்கிய நிகழ்வுகளும்…!

Madurai Chithirai Festival: மதுரை சித்திரை திருவிழா 2025 மே 8-ஆம் தேதி அழகர் கோவிலில் தொடங்கி, மே 17-ஆம் தேதி உற்சவ சாற்று முறையுடன் நிறைவு பெறுகிறது. முக்கிய நிகழ்வாக, 2025 மே 12-ஆம் தேதி அழகர் வைகை ஆற்றில் இறங்குவார், மேலும் கருட வாகனத்தில் மோட்சம் நிகழ்வு மற்றும் தசாவதார காட்சி போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டில், 496 மண்டபங்களில் அழகர் எழுந்தருளுகிறார் என்பது சிறப்பம்சமாகும்.

மதுரை சித்திரை திருவிழா.. அழகர் பயணமும் முக்கிய நிகழ்வுகளும்...!

அழகர்கோவிலில் சித்திரை திருவிழா

Published: 

22 Apr 2025 07:22 AM

மதுரை ஏப்ரல் 22: 2025 ஆம் ஆண்டு மதுரை (Madurai) சித்திரைத் திருவிழா (Madurai Chithirai Festival) 2025 மே 8-ஆம் தேதி அழகர்கோவிலில் தொடங்கி, மே 17-ஆம் தேதி உற்சவ சாற்று முறையுடன் நிறைவு பெறுகிறது. முக்கிய நிகழ்வாக, 2025 மே 12-ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். முன்னதாக 2025 மே 10-ஆம் தேதி அழகர் தங்கப்பல்லக்கில் அழகர்கோவிலிலிருந்து புறப்பட்டு, 2025 மே 11-ஆம் தேதி பக்தர்கள் மதுரையில் வரவேற்கின்றனர். கருட வாகனத்தில் மோட்ச நிகழ்வு (Moksha event in Garuda Vahana), தசாவதார காட்சி, பூப்பல்லக்கு விழா போன்றவை நடைபெறும். விழா பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை அரசு மற்றும் கோவில் நிர்வாகம் ஒருங்கிணைத்துள்ளனர்.

மதுரை சித்திரை திருவிழா

மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரபலமான சித்திரை திருவிழா, இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற உள்ளது. 2025-ம் ஆண்டு சித்திரை திருவிழா, மே 8-ந் தேதி அழகர்கோவிலில் தொடங்கவிருக்கிறது. இவ்விழாவின் முன்னோட்டமாக, கடந்த 2025 பிப்ரவரி 3-ந் தேதி தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சப்பர முகூர்த்த விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 2025 ஏப்ரல் 27-ந் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் அதே கோவிலின் முன் மங்கள இசையுடன் முகூர்த்தக்கால் நாட்டப்படும்.

கள்ளழகர் 496 மண்டபங்களில் எழுந்தருள்கிறார்

2025 மே 10-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல், அழகர் தங்கப்பல்லக்கில் அழகர்கோவிலிலிருந்து மதுரைக்கு புறப்படுகிறார். இதையடுத்து, 2025 மே 11-ந் தேதி மதுரை மூன்று மாவடிகளில் பக்தர்கள் அவரை வரவேற்கின்றனர். 2025 மே 12-ந் தேதி அதிகாலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள், சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான, அழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டில், 496 மண்டபங்களில் அழகர் எழுந்தருளுகிறார் என்பது சிறப்பம்சமாகும்.

முக்கிய நிகழ்வுகள் எப்போது நடக்கிறது?

2025 மே 13-ந் தேதி தேனூர் மண்டபத்தில், கருட வாகனத்தில் அழகர் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கிறார். இதே நாளிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார காட்சி நடைபெறும். 2025 மே 14-ந் தேதி இரவு சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு விழா நடைபெறும். 2025 மே 15-ந் தேதி காலை, அழகர் அழகர்மலைக்கு பிரியா விடை பெற்று திரும்புகிறார். 2025 மே 16-ந் தேதி காலை 10.25 மணிக்குள் அழகர் அழகர்கோவிலில் திரும்பி இருப்பிடம் சேருகிறார்.
2025 மே 17-ந் தேதி உற்சவ சாற்று முறையுடன் திருவிழா சிறப்பாக நிறைவு பெறும்.

விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு

திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் யக்ஞ நாராயணன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர். விழாவின் முன்னேற்பாடுகளை மதுரை மாவட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, சேகர்பாபு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தமுக்கம் மைதானம் முதல் கோரிப்பாளையம் வரை நடந்தே சென்று, வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடம், மேம்பால பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

விழா காலத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும். மேலும், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

பக்தர்களுக்கான சேவைகள்

விழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்காக உணவு, குடிநீர், தற்காலிக கழிப்பறைகள், சுகாதார வசதிகள் உள்ளிட்டவை அரசு மூலம் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. அரசு அனுமதியில்லாத உணவகங்களில் சுத்தமற்ற உணவு வழங்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.