செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்.. டாஸ்மாக் வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!
Madras High Court : டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோதம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி, வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. காழ்ப்புணர்ச்சி காரணமகா சோதனை நடத்துவதாக அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, ஏப்ரல் 23: தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் (Tasmac Case) தொடர்ந்து மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோதம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி, வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்துவதாக அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்
சென்னை டாஸ்மாக் தலைமையகத்தில் மார்ச் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது. மேலும், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை பகீர் அறிக்கையை சமர்ப்பித்தது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய விசாரித்து வந்தனர். பல கட்ட விசாரணைக்கு பிறகு, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் 2025 ஏப்ரல் 23ஆம் தேதியான இன்று தீர்ப்பு அளித்தது. அதன்படி, டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்து மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
டாஸ்மாக் வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
அந்த தீர்ப்பில், ”எங்களுக்கு முன் உள்ள ஆவணங்களை வைத்தே விசாரிக்க முடியும். அமலாக்கத்துறை சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்பதை விசாரிக்க முடியாது. சோதனையின்போது டாஸ்மாக் ஊழியர்களை நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பியது ஏற்கத்தக்கதல்ல.
அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேசநலனுக்கானது. மேலும், காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்துவதாக அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது” என்று கூறியது. எனவே, டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோதம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி, வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
இதன் மூலம், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை தொடரும். இதனால், செந்தில் பாலாஜி மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. டாஸ்மாக் வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் அமலாக்கதுறை விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
ஏற்கனவே, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறை சென்ற செந்தில் பாலாஜி, கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியே வந்தார். அதன்பிறகு, அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது டாஸ்மாக் வழக்கில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.