“தாமரை இரட்டை இலையோடு மலரும்” அதிமுக பாஜக கூட்டணி.. தமிழிசை போட்ட ட்வீட்

AIADMK BJP Alliance : அதிமுக பாஜக கூட்டணி குறித்து தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தாமரை இரட்டை இலையோடு மலரும்  அதிமுக பாஜக கூட்டணி.. தமிழிசை போட்ட ட்வீட்

தமிழிசை சௌந்தரராஜன்

Updated On: 

13 Apr 2025 08:43 AM

சென்னை, ஏப்ரல் 13: தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும் (AIADMK BJP) என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai soundararajan) கூறியுள்ளது. பாஜக மாநில தலைராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் பணியாற்றி வருகின்றன.

“தாமரை இரட்டை இலையோடு மலரும்”

திமுக கூடடணி வலுவாக உள்ள நிலையில், அதிமுகவும் தனது கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது.  அந்த வகையில், தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. கடந்த 2021ஆம் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டது.

இந்த தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. அதைத் தொடர்ந்து, கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  இதனால் அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. 2025 லோக்சபா தேர்தலிலும் அதிமுக பாஜக தனித்தனியாக போட்டியிட்டது.

இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். ஆனால், தற்போதை சூழலை கருத்தில் கொண்டு அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.   மேலும், பாஜக தலைவரையும் மேலிடம் மாற்றியுள்ளது. அதன்படி, தற்போது பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.

இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார்.
அதில், ”நம் மாபெரும் இயக்கமாம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்று இருக்கும் அண்ணன் நைனார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழிசை போட்ட ட்வீட்


நேற்று வரை கட்சியை பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இயக்கிக் கொண்டிருந்த தம்பி அண்ணாமலை அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அண்ணாமலை அவர்களின் தீவிரமான பணியையும் அனைத்து தர மக்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடம் கட்சியை எடுத்துச் சென்றதில் மிக முக்கிய பங்காற்றியதில் மட்டுமல்லாமல் பாஜகவை பற்றி பேசாமல் தமிழகத்தில் எந்த நிகழ்வும் நடக்காது என்ற நிலைக்கு கொண்டு வந்தார் என்பதை மகிழ்ச்சியோடு பதிவு செய்கிறேன்” என்று தமிழிசை கூறியிருக்கிறார்.

மேலும், “அண்ணன் நைனார் நாகேந்திரன் அவர்களை நேரடியாக இல்லையென்றாலும் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே. ஒரு நாகரிகமான அரசியல்வாதியாக கவனித்து வந்திருக்கிறேன். இன்று பாஜகவை வழிநடத்தும் ஒரு மாபெரும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

ஒன்றிணைந்து பணியாற்ற கூட்டணி அமைந்திருக்கிறது. நான் நேற்று குறிப்பிட்டதை போல.. குளத்தில் தாமரை வட்ட இலையோடு வளரும். தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும். அதற்கு அண்ணன் நைனார் நாகேந்திரன் அவர்கள் அடித்தளம் அமைப்பார்கள்.

மரியாதைக்குரிய மோடி என்ற நரேந்திரனின்.. கனவை இந்த நாகேந்திரன் நிறைவுபடுத்துவார். ஒன்றிணைந்து பணியாற்றுவோம். வெற்றி பெறுவோம் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” என்று குறிப்பிட்டிருந்தார்.