காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்… யார் இவர்?
Kumari Ananthan Passes Away: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் (93) காலமானார். வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்சை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரி அனந்தன், 2025 ஏப்ரல் 9ஆம் தேதி அதிகாலையில் காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை, ஏப்ரல் 09: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் (Kumari Ananthan), தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான (Tamilisai Soundararajan Father) குமரி அனந்தன் (93) காலமானார். சென்னை விருகம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த குமரி அனந்தன் உயிரிழந்துள்ளார். இவர் சில மாதங்களாகவே குடியாத்தம் பகுதியில் உள்ள அத்தி இயற்கை, யோகா மருத்துவமனை மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
ஆனால், கடந்த சில தினங்களாகவே அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. இதனை அடுத்து, சென்னை விருகம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் குமரி அனந்தன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
வயது மூப்பு மற்றும் சிறுநீர் பிரச்னை காரணமாக சிசிக்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஏப்ரல் 09ஆம் தேதி அதிகாலை சிசிச்சை பலனின்றி குமரி அனந்தன் உயிரிழந்தார். இவரது உடல் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பபட்டு இருக்கிறது.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தனது தந்தை மறைவுக்கு தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார்.
யார் இந்த குமரி அனந்தன்?
அதில், “தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை. தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள் இன்று என் அம்மாவோடு இரண்டர கலந்து விட்டார். நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்” என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் குமரிமங்கலத்தில் மார்ச் 19, 1933 அன்று பிறந்த அனந்தன், தமிழ் மீது தீராத பற்று உள்ளவர். எழுத்தாளர் மற்றும் திறமையான பேச்சாளர். தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர். பல புத்தகங்களை எழுதியுள்ளார். தமிழகத்தில் மிக மூத்த அரசியல்வாதியாக திகழ்ந்தவர்.
அவரது தந்தை ஒரு வில்லுப்பாட்டு கலைஞரும் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். எனவே, குமரி அனந்தன் இயல்பாகவே காங்கிரஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். பெருந்தலைவர் காமராஜருடன் பணியாற்றியவர். 1977ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராக நாகர்கோவிலில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது, நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்விகள் கேட்கும் உரிமையை அவர் வலியுறுத்தினார். முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், ஐந்து முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார் குமரி அனந்தன். 2024ஆம் ஆண்டு குமரி அனந்தனுக்கு தமிழக அரசின் தகைசல் விருது வழங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டுக்கான காமராஜர் விருதை குமரி அனந்தன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமிருந்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.