தஞ்சாவூர் அரசு மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் ஏற்பட்ட தீ விபத்து – மக்கள் அதிருப்தி!
Fire Accident at Thanjavur Government Hospital: தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனை சரியாக பராமரிக்கப்படுவதில்லை என மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

தஞ்சாவூர், ஏப்ரல் 24: தஞ்சாவூரில் (Thanjavur) உள்ள இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் ஏப்ரல் 24, 2025 அன்று ஏ.சியில் (AC) ஏற்பட்ட மின் கசிவு காரணமாக திடீரென மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவில் (Maternity Ward) தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் மருத்துவமனைகளை விட்டு வெளியேறினர். இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து தீயை அணைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உடனடியாக வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையின் முன் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா செய்தியாளர்களை சந்தித்து தீ விபத்து குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், மருத்துவமனையின் இரண்டாம் மாடியில் உள்ள மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட மின்கசிவால் ஏ.சி. கீழே விழுந்ததாகவும் அதன் காரணமாக மெத்தையில் தீப்பிடித்ததாகவும் தெரவித்தார். முதலாவது மாடியில் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர் என்றும் யாருக்கும் எந்தவித காயமும், உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் விளக்கமளித்தார்.
தஞ்சை மருத்துவமனையில் தொடர்ச்சியாக நடைபெறும் தீ விபத்துகள்
ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டிலும் தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில், பிரசவ வார்டில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்போது புதியதாக கட்டப்பட்ட பிரசவ வார்டில், மின்கசிவால் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து ஏற்படும் தீ விபத்துகளுக்கு, மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே முக்கியக் காரணம் என மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இந்த போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மருத்துவமனையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புதிதாக பிரசவித்த தாய்மார்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர்.
தஞ்சாவூர் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பிற மாவட்ட மக்களும் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ச்சியாக தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் அரசு மருத்துவ மனைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக இருந்து வருகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இரா.சரவணன் இயக்கத்தில் உடன்பிறப்பே படத்தின் படப்படிப்புக்காக ஜோதிகா தஞ்சாவூர் வந்திருந்தார். அப்போது தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் பங்கேற்றிருந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜோதிகா, தஞ்சை அரசு மருத்துவமனை மோசமாக பராமரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.