AIADMK : முடிவுக்கு வரும் இரட்டை இலை வழக்கு.. ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Election Commission Notice to EPS and OPS | இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனு மீதான இறுதி விசாரணை ஏப்ரல் 28, 2025 அன்று நடைபெற உள்ள நிலையில், அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

AIADMK : முடிவுக்கு வரும் இரட்டை இலை வழக்கு.. ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி

Updated On: 

18 Apr 2025 18:17 PM

சென்னை, ஏப்ரல் 18 : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagm) இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 28, 2025 அன்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இறுதி விசாரணைக்கு ஆஜராகும் படி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மிக நீண்ட நாட்களாக நீடித்து வந்த இந்த பிரச்சனைக்கும் இந்த இறுதி விசாரணையின் மூலம் தீர்வு எட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசில் என்ன கூறியுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு பல பிரிவுகளாக பிரிந்த அதிமுக

அதிமுகவின் பொதுச்செயலாளாராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இருந்து வந்தனர். இந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக இரண்டாக பிறந்தது. இந்த நிலையில், பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி, தன்னை அதிமுகவின் ஒரே பொதுச்செயலாளராக அறிவித்துக்கொண்டார். அதுமட்டுமன்றி, ஓ.பன்னீர் செல்வத்தை அவர் கட்சியில் இருந்தும் நீக்கினார்.

இந்த நிலையில் தான், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுசெயலாளர் ஆனது செல்லாது, அவர் நடத்திய பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது, கட்சி தலைவர் பதவியை தொண்டர்களே நேரடியாக தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை ஈபிஎஸ் மாற்றியது செல்லாது என கட்சியில் இருந்த சிலர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம், புகழேந்தி உள்ளிட்டோர் தேர்தல ஆணையத்தில் மனு அளித்திருந்தனர்.

ஆனால், அவர்களின் மனு மீது தேர்தல் ஆணையம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த நிலையில், தங்களது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி  சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இவர்கள் யாரும் அதிமுக உறுப்பினர்கள் இல்லை என்றும் அவர்களது மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்றும் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

இவ்வாறு அதிமுக விவகாரம் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், அவற்றுக்கெல்லாம் விரைவில் தீர்வு எட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.