Emotional Wedding: தந்தையின் இறுதிச்சடங்கு! கண்ணீருடன் காதலிக்கு தாலி கட்டிய மகன்.. நெகிழ்ச்சியான சம்பவம்!
Son Marries at Father's Funeral: கடலூரைச் சேர்ந்த அப்பு, நீண்ட கால காதலியான விஜயசாந்தியைத் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டார். தந்தை செல்வராஜின் மறைவுக்குப் பின், அவரது இறுதிச் சடங்கின்போதே, தனது காதலியுடன் திருமணம் செய்து கொண்டார். இந்தக் கதையானது அவர்களின் அன்பையும், துயரத்தையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறது. இது இணையத்தில் வைரலாகி உள்ளது.

தந்தையின் இறுதிச்சடங்கில் திருமணம்
கடலூர், ஏப்ரல் 19: பெற்றோர் முன்பு அனைவரும் தங்களது திருமணத்தை நடத்த வேண்டும் என்பது அனைவரின் கனவு. இதற்காக இன்றைய காலத்தை சேர்ந்த இளைஞர்கள் தாங்கள் காதலித்தவர்களை திருமணம் (Marriage) செய்துகொள்ள எப்படியாவது முன்னுக்கு வர வேண்டும் என்று போராடுவது மட்டுமல்லாமல், காதலையும் போராடி பெற்றொர் (Parents) முன்னிலையில் திருமணம் செய்து கொள்கின்றனர். இப்படி ஒருபுறம் திருமணம் என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், பலருக்கும் திருமணம் என்பது பெரும் பொறுப்பாகவும் அமைந்துவிடுகிறது. அந்தவகையில், கடலூரில் ஒரு இளைஞன் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பார்த்தோர் நெஞ்சை கண்கலங்க செய்தது. அதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
என்ன நடந்தது..?
கடலூர் மாவட்டத்தை அடுத்த கவணை கிராமத்தை சேர்ந்த தம்பதி பெயர் செல்வராஜ் – கண்ணம்மாள். இவர்களுக்கு அப்பு என்ற மகன் இருந்துள்ளார். அப்பு கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பக்கத்து ஊரான அரசக்குழி கிராமத்தை சேர்ந்த விஜயசாந்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில், அப்பு சட்டப்படிப்பு படித்து முடித்துள்ள நிலையில், விஜயசாந்தியும் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்களது காதல் குறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில், திருமண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இப்படியான சூழ்நிலையில்தான், அப்புவின் தந்தைக்கு 2 நாட்களுக்கு முன்பு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக உடன் இருந்த நபர்கள் அப்புவின் தந்தையான செல்வராஜை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு செல்வராஜை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று அதாவது 2025 ஏப்ரல் 18ம் தேதி மாலை செல்வராஜூக்கு இறுதிச்சடங்கு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அப்போது உறவினர்கள் அனைவரும் அங்கு சூழ்ந்திருந்த நிலையில், அப்பு தனது தந்தையின் முன்பு திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார். அப்பு உடனடியாக தனது நண்பர்கள் மூலம் தாலியை ஏற்பாடு செய்யக்கோரி, தன்னுடைய தந்தையின் கைகளில் வைத்து தனது காதலியான விஜயசாந்தி கழுத்தி கண்ணீருடன் கட்டினார்.
இதன் தொடர்ச்சியாக, இறந்த அப்புவின் தந்தையான செல்வராஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. தொடர்ந்து, இறுதிச்சடங்கிற்கு வந்த உறவினர்கள் அப்பு மற்றும் விஜயசாந்திக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.