திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி.. என்ன சொல்கிறது மாநகராட்சி நிர்வாகம்
Drinking Water Scare: திருச்சியின் உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரினால் 4 பேர் இறந்ததாக கூறப்படும் நிலையில், 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்து, குடிநீரில் தொற்று இல்லை என்று உறுதி செய்து, நாளை முதல் விநியோகம் சீராக நடைபெறும் என அறிவித்தனர். அரசியல் கட்சி பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

திருச்சி உறையூர் குடிநீர் பிரச்னை
திருச்சி ஏப்ரல் 21: திருச்சி உறையூர் (Trichy Uraiyur) பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 4 பேர் இறந்ததாக எழுந்த தகவலை அடுத்து மாநகராட்சி மேயர் (Mayor of the Corporation) மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்தனர். மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 19 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் குடிநீரில் தொற்று இல்லை (Drinking water not contaminated) எனத் தெரியவந்த நிலையில், நாளை முதல் விநியோகம் சீராக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நிவாரணம் கோரிக்கை விடுத்து, பாதிக்கப்பட்டோர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்தா?
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்த பகுதியில் கடந்த சில நாட்களில் 4 வயது குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்தது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பொதுமக்கள் போராட்டம் – ஆய்வு மற்றும் மருத்துவ முகாம்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன.
பாதிக்கப்பட்டோர் விபரம்
மின்னப்பன் தெருவைச் சேர்ந்த லதா (60), மருதாம்பாள் (85), பிரியங்கா (4) மற்றும் கயிலை மணி (45) ஆகியோர் உயிரிழந்தனர். இதில் 11 பெண்கள் மற்றும் 8 குழந்தைகள் உட்பட 19 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 10 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிப்பு காரணம் – அதிகாரிகள் விளக்கம்
மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்ட தகவலில், குடிநீரில் கழிவுநீர் கலந்தது, அல்லது கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமை காரணமாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. குடிநீர் குழாய்களில் கசிவு ஏற்பட்டதா என்பதை ஆய்வு செய்யும் பணியும் நடைப்பெற்று வருகிறது.
திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் விளக்கம்
திருச்சியில் 4½ வயது குழந்தை இறந்த விவகாரம் குறித்து, மாநகராட்சி ஆணையர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், பாரம்பரிய சிகிச்சையால் ஏற்பட்ட ஒவ்வாமையே காரணமாக தெரிகிறது. அப்பகுதியில் நடந்த அன்னதான உணவுகளால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. குடிநீரில் தொற்று இல்லை என மருத்துவ ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தவறான செய்தி பரவல் – பொதுமக்கள் பதட்டம்
பிரியங்கா என்ற குழந்தை வயிற்று ஊதுதலால் உயிரிழந்தது குறித்து தவறான தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பதட்டமடைந்தனர். மக்களுக்கு சரியான தகவல்களை வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
குடிநீர் விநியோகம் நிறைவு – சீராக்க நடவடிக்கை
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பனிக்கன் தெரு மற்றும் மின்னப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதற்குப் பதிலாக லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் 15 இடங்களில் எடுத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. ஆய்வில் தொற்று எதுவும் இல்லை எனவும், குடிநீர் விநியோகம் நாளை முதல் சீராக இருக்கும் எனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
நிவாரணம் வழங்க வலியுறுத்தல் – அரசியல் கட்சி பிரதிநிதிகள் நேரில் பார்வை
பாஜக மாவட்ட தலைவர் கே. ஒண்டிமுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அதிமுக மற்றும் அமமுக கட்சி பிரதிநிதிகளும் பயணித்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை
தற்போது மாநகராட்சி பொறியாளர்கள் வீடுதோறும் குடிநீர் குழாய்களில் சோதனை நடத்தி வருகின்றனர். குடிநீரில் கலப்புகள் இருக்க வாய்ப்பு இல்லை என்றும், கிளோரின் சேர்க்கும் பணிகள் முடிவடைந்த பின்னர் நாளை முதல் விநியோகம் வழக்கப்படி நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
இந்த சம்பவம் தொடர்பாக, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீர் பிரச்னை கடந்த 15 நாட்களாக நீடித்து வருவதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம்” எனக் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த ஸ்டாலின்…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) April 20, 2025
அண்ணாமலையின் ஆவேசம்
இதேவேளை, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தனது பதிவில், “மாநகராட்சிக்கு நீண்ட நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக பொதுமக்கள் புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக மூன்று உயிர்கள் பறிபோனது மிகுந்த சோகம். சென்னை பல்லாவரத்திலும் இதேபோல் முன்பு மூவர் உயிரிழந்த சம்பவத்தில், அரசு பரிசோதனை அறிக்கையை வெளியிடாமலே தப்பித்தது. இப்போது மீண்டும் அதே நிலை. பொதுமக்களின் உயிர் என்ன தமிழக அரசுக்கு இவ்வளவு மலிவா?” எனக் கேள்வி எழுப்பினார்.