சென்னை: கட்டுமஸ்தான உடலுக்காக ஹெவிடோஸ்… பறிபோன பாடிபில்டரின் உயிர்…!

Chennai Kasimedu youth dies: சென்னை காசிமேட்டில், 35 வயது ராம்கி என்ற இளைஞர், கட்டுமஸ்த உடலுக்காக ஹெவிடோஸ் ஸ்டீராய்டு மற்றும் அதிகளவு புரோட்டின் பவுடர் எடுத்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட அவர், கடந்த 6 மாதமாக தினமும் 3 மணி நேரம் வரை ஜிமில் பயிற்சி செய்துள்ளார்.

சென்னை: கட்டுமஸ்தான உடலுக்காக ஹெவிடோஸ்... பறிபோன பாடிபில்டரின் உயிர்...!

அதிகளவு புரோட்டின், ஸ்டீராய்டு எடுத்த பாடிபில்டர் மரணம்

Published: 

09 Apr 2025 08:38 AM

சென்னை ஏப்ரல் 09: சென்னை காசிமேட்டில், (Kasimedu, Chennai) தனது உடலை வலிமையாக மாற்றுவதற்காக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட 35 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெவிடோஸ் ஸ்டீராய்டு மற்றும் புரோட்டின் பவுடர் (Steroid and protein powder) பயன்பாட்டினால் இந்த விபரீதம் ஏற்பட்டதாக அவரது மனைவி வேதனையுடன் தெரிவித்தார். தீவிர உடற்பயிற்சி (Intense Exercise) மேற்கொண்ட அவர், கடந்த 6 மாதமாக தினமும் 3 மணி நேரம் வரை ஜிமில் பயிற்சி செய்துள்ளார். வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மரணம் தொடர்பாக ஜிம் பயிற்சியாளருக்கு எதிராக உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் ஹெவிடோஸ் மருந்துகளை பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

6 மாதமாக தீவிர பயிற்சி செய்த ராம்கி

காசிமேடு ஜீவரத்தினம் குடியிருப்பை சேர்ந்த ராம்கி, மீன்வியாபாரியாக பணியாற்றி வந்தவர். தனது உடலை கட்டுமஸ்தமாக்கும் எண்ணத்தில், திருவொற்றியூரில் உள்ள Sweat Zone ஜிம்மில் கடந்த 6 மாதங்களாக தினமும் இரவு 3 மணி நேரம் வரை பயிற்சி செய்தார். ஜிம்பயிற்சியாளர் தினேஷின் ஆலோசனையில், ஸ்டீராய்டு மருந்துகளை ஊசி மூலம் செலுத்தியும், அதிகளவு புரோட்டின் பவுடரும் உட்கொண்டும் உடலை விரைவில் மாற்ற முயற்சித்தார்.

வயிற்றுவலியால் மருத்துவமனையில் அனுமதி மற்றும் முடிவில் மரணம்

இருதினங்களுக்கு முன்பு வயிற்றுவலியால் அவதியுற்ற ராம்கியை, அவரது இரண்டாவது மனைவி மான்விழி, முதலில் இராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் நிலை மோசமடைந்ததால் பாரிமுனை நேஷனல் மருத்துவமனைக்கு மாற்றினர். மருத்துவர்கள், ஹெவிடோஸ் புரோட்டின் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளின் பக்கவிளைவால் உடல் செயலிழந்ததாக தெரிவித்தனர். சிகிச்சை பலனின்றி ராம்கி உயிரிழந்தார்.

மனைவியின் உருக்கமான பேச்சு

தனது கணவர் ஒவ்வொரு நாளும் ஒரு கிலோ சிக்கன் சாப்பிட்டு கடுமையாக உடற்பயிற்சி செய்வதாகவும், இது உடலுக்கு எதிராக இருக்கும் என கூறியும் அவர் கேட்கவில்லை என்றும் ராம்கியின் மனைவி மான்விழி வேதனையுடன் கூறினார்.

ஜிம் பயிற்சியாளருக்கு எதிராக புகார் – போலீசார் விசாரணை

ராம்கியின் மரணத்திற்கு ஜிம் பயிற்சியாளர் தினேஷ் தான் காரணம் எனக் கூறி உறவினர்கள் காசிமேடு போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ராம்கியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தினேஷ் தற்பொழுது செங்கல்பட்டில் இருப்பதாக கூறி தனது செல்போனை ஆஃப் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவர் ஆலோசனை இன்றி ஹெவிடோஸ் – உயிருக்கு விபரீத ஆபத்து

மருத்துவர் ஆலோசனை இல்லாமல், குறுகிய காலத்தில் கட்டுமஸ்தமான உடலை பெறுவதற்காக ஹெவிடோஸ் ஸ்டீராய்டு மருந்துகளும், புரோட்டின் பவுடர்களும் பயன்படுத்துவது உயிருக்கு பெரிய அபாயமாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.