சென்னை பீச் டூ செங்கல்பட்டு.. சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார ரயில்.. நேர அட்டவணை இதோ!

Chennai AC Electric Train : முதல்முறையாக சென்னயில் ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஏசி மின்சார ரயில்கள், 2025 ஏப்ரல் 19ஆம் தேதியான இன்று முதல் இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரையில் செங்கல்பட்டு வரை ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை பீச் டூ செங்கல்பட்டு.. சென்னையில்  இன்று முதல் ஏசி மின்சார ரயில்.. நேர அட்டவணை இதோ!

சென்னை ஏசி மின்சார ரயில்

Updated On: 

19 Apr 2025 06:34 AM

சென்னை, ஏப்ரல் 19: கோடை வெயில் கொளுத்தும் நிலையில், சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை 2025 ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏசி மின்சார ரயில்  (Chennai AC EMU Train) இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது  மின்சார ரயில் சேவை. இந்த மின்சார ரயில் சேவையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக,  சென்னை  கடற்கரை செங்கல்பட்டு வழித்தடங்களில்  பயணிகளின் கூட்டம் அதிமாகவே இருக்கும்.

சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார ரயில்

இதனால், இந்த கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ப ஏசி மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே சார்பில், ஏசி மின்சார ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.  இதற்கான தயாரிப்பு பணிகளை மேற்கொண்டது.

இதற்கான சோதனை ஓட்டமும் முடிந்த நிலையில், தற்போது இந்த ரயில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அதாவது, 2025 ஏப்ரல் 19ஆம் தேதியான இன்று முதல் ஏசி மின்சார ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு இரண்டு ரயில் சேவைகளும், கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு ஒரு சேவைகளும் வழங்கப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ஏசி மின்சார ரயில், கோட்டை, பார்க், எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திருசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேலி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோயில், பரனூர் வழியாக சென்று செங்கல்பட்டை காலை 8.15 மணிக்கு அடைகிறது.

நேர அட்டவணை இதோ


மறுமார்க்கமாக காலை 9 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில், மேற்கண்ட வழிமார்க்கமாக சென்னை கடற்கரையை காலை 10.30 மணிக்கு சென்றடைகிறது. மேலும், மதியம் 3.45 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், முக்கிய ரயில் நிலையங்களில் நின்று, செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு மாலை 5.25 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 7.15 மணிக்கு கடற்கரைக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் ரயில், அனைத்து ரயில் நிலையங்களில் நின்று இரவு 8.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து அடுத்த நாள் காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, கடற்கரைக்கு காலை 6.45 மணிக்கு சென்றடைகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  இதற்கான டிக்கெட் கட்டணம் என்பது ரூ.30 முதல் 35 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த இடத்திற்கு ஏற்ப கட்டண சேவை மாறுப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.