சைபர் கிரைம் எச்சரிக்கை: பிரபலங்களை முன்னிறுத்தி உருவாகும் போலி முதலீடு விளம்பரம்
Chennai Cyber Crime Warns: ஸ்ரேயா கோஷல், டாக்டர் சுதா மூர்த்தி போன்ற பிரபல நபர்களை சமூக ஊடகங்களில் முன்னிறுத்தி போலி செய்திகளை உருவாக்கி, மோசடி முதலீட்டு தளங்களை ஊக்குவிக்கும் பதிவுகள் பெருகி வருகின்றன. இது பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தைக் கொண்டு வருகிறது என்று தமிழக சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை ஏப்ரல் 13: சமூக ஊடகங்களில், பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தி பரபரப்பான தலைப்புச் செய்திகள் மற்றும் நன்கு அறியப்பட்ட செய்தி நிறுவனங்களின் போலி லோகோக்கள் (Fake Logos) அடங்கிய பதிவுகள் வேகமாக பரவி வருகின்றன. சமூக ஊடகங்களில் ஸ்ரேயா கோஷல், சுதா மூர்த்தி (Shreya Ghoshal, Sudha Murthy) போன்ற பிரபலங்களை பயன்படுத்தி போலி முதலீட்டு வாய்ப்புகளை பரப்பும் மோசடி செய்திகள் அதிகரித்து வருகின்றன. இவை பெரும்பாலும் எக்ஸ் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிரப்படுகின்றன. சைபர் கிரைம் போலீசார் இதுவரை 25 போலி X பதிவுகள், 18 ஃபேஸ்புக் பதிவுகள், 38 மோசடி தளங்களை அகற்றியுள்ளனர். மக்கள் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைத் தவிர்க்கவும், நம்பகமான ஆதாரங்கள் மூலம் தகவல்களை சரிபார்க்க வேண்டும் என தமிழக சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏமாற்றப்பட்டவர்கள் 1930 என்ற இலவச எண்ணிலும், www.cybercrime.gov.in இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்
பிரபலங்களை முன்னிறுத்தும் போலி செய்தி
சமீபத்தில், பங்கு வர்த்தகம், கிரிப்டோகரன்சி போன்ற நிதி தொடர்பான திட்டங்களுக்காக பிரபலங்களின் பெயர்களை தவறாக பயன்படுத்தும் சமூக ஊடக பதிவுகள் அதிகரித்துள்ளன. இதன் மூலம் ஏமாற்றும் வகையில் பொய்யான முதலீட்டு வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இந்த போலியான செய்திகளில் அதிகம் காணப்படும் பிரபலர்களாக ஸ்ரேயா கோஷல், டாக்டர் சுதா மூர்த்தி போன்றோர் அடங்குவர்.
எக்ஸ் தளத்தில் தீவிர கண்காணிப்பு
முன்பு ட்விட்டராக இருந்த எக்ஸ் தளத்தில் இத்தகைய போலி செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. சைபர் ரோந்து குழு இந்த தளத்தில் மோசடி இணைப்புகள் மற்றும் பக்கங்களை அடையாளம் கண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 25 போலி “X” பதிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், 38 மோசடி தளங்களும் அடையாளம் கண்டு தடுக்கப்பட்டுள்ளன.
முகநூல் தளத்திலும் மோசடிகள்
ஃபேஸ்புக்கிலும், குடியரசுத் தலைவர், பிரதமர், சத்குரு போன்ற பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பயன்படுத்தி முதலீட்டு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 18 பேஸ்புக் பதிவுகள் மற்றும் 15 இணையதளங்கள் தொடர்பில் சைபர் கிரைம் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
மாயையான தளங்கள்: மோசடிக்கான வழிகாட்டிகள்
“நியூஸ் பல்ஸ்”, “ஹாஃப் பிரைஸ் ஷாப்”, “ஆசம்”, “சினிமாக்குத்தூசி” போன்ற பெயர்களிலான X கணக்குகள் வழியாக, பயனர்கள் “மேலும் அறிக” என்பதை கிளிக் செய்யும் போது, Express247.com, news.mirroruserestart.today போன்ற போலி செய்தி தளங்களுக்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர்.
மோசடி செயல்படும் முறை
- பிரபலங்களை முன்னிறுத்தி பரபரப்பான தலைப்புகள் கொண்ட போலி செய்திகள் வெளியிடப்படுகின்றன.
- பயனர்கள் கிளிக் செய்தால், உண்மையான செய்தியாகத் தோன்றும் போலி தளங்களுக்கு திருப்பப்படுகின்றனர்.
- பின்வட்டணமாக வருமான வரி மற்றும் நீதித்துறையால் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறும் கட்டளைகள் இடப்படுகின்றன.
- இதனால், மக்கள் அப்பாவியாக தனது பணத்தை முதலீடு செய்ய நேரிடுகிறது.
சமூக ஊடக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
எக்ஸ், மெட்டா போன்ற தளங்கள், தவறான தகவல்களை அடையாளம் கண்டு முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் பிரிவு வலியுறுத்தியுள்ளது. வருமானத்திற்காக சரிபார்ப்பு கட்டணங்கள் மற்றும் விளம்பரங்கள் பெறும் இத்தளங்கள், போலி செய்திகளை கட்டுப்படுத்த தவறுவதில் கவலைக்குரிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு ஆலோசனைகள்
- சந்தேகத்திற்கிடமான இணையதள இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்கவும்.
- பிரபலங்களை பயன்படுத்தி ஊக்குவிக்கப்படும் முதலீட்டு திட்டங்களை நம்ப வேண்டாம்.
- தகவல்களை அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் உறுதி செய்து கொள்ளவும்.
- தனிப்பட்ட நிதி விவரங்களைத் தெளிவில்லாத தளங்களில் பகிர வேண்டாம்.
புகாரளிக்கும் வழிகள்
இந்தவகை மோசடிகளில் சிக்கியவர்கள் அல்லது சந்தேகமான செயல்பாடுகளை கண்டவர்கள், 1930 என்ற இலவச உதவி எண்ணை அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் பிரிவு தெரிவித்துள்ளது.