பொது இடங்களில் கட்டட கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம்.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Chennai Building Waste Fine | சென்னையில் பொது இடங்களில் கட்டட கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், கட்டட கழிவுகளை அகற்றுவது தொடர்பாக சில முக்கிய விதிகளையும் மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில், கட்டட கழிவுகள் அகற்றுவது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொது இடங்களில் கட்டட கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம்.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

17 Apr 2025 08:28 AM

சென்னை, ஏப்ரல் 17 : சென்னையில் கட்டக் கழிவுகளை (Building Waste) கண்ட இடங்களில் கொட்டினால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி (Chennai Corporation) தெரிவித்துள்ளது. சென்னையில் அதிக அளவிலான கட்டுமான பணிகள் நடைபெறும் நிலையில், மாநகராட்சி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் இந்த புதிய விதிகள் கூறுவது என்ன, யார் யாருக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னையில் அதிக அளவு நடைபெறும் கட்டுமான பணிகள்

தமிழகத்தின் தலைநகர் ஆக உள்ள சென்னையில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அதிக மக்கள் தொகை காரணமாக அதிக கட்டடங்களும் தேவைப்படுகின்றன. வீடுகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், கடைகள் என நாளுக்கு நாள் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்னையின் வளர்சிக்கு ஏற்ப கட்டடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே வருகிறது. இந்த வளர்ச்சி நகரத்தின் சுகாதாரத்தை பாதிக்கும் விதமாக அமைந்துள்ளது.

அதாவது சென்னையில் கட்டட கட்டுமான பணிகள் அதிகம் நடைபெறும் நிலையில், கட்டட கழிவுகளும் அதிகமாக கொட்டப்படுகின்றன. பழைய கட்டடங்களை புனரமைப்பது, பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதியதாக கட்டுவது என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்த கழிவுகளால் சுற்று சூழல் பாதிப்படையும் நிலை உள்ளது. அதனை தடுக்கும் வகையில் தான் சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

கட்டட கழிவுகளை கொட்டுவது தொடர்பான சில விதிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதாவது, சிறிய வீடுகளை பழுது பார்க்கும்போது உண்டாகும் கழிவுகள், ஓடுகள், குளியல் தொட்டிகள், வாஷ்பேசின்கள், அலமாரிகள், உடைந்த பீங்கான் பொருட்கள் உள்ளிட்டவற்றை மாநகராட்சியே இலவசமாக எடுத்துக்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த கழிவுகள் ஒரு மெட்ரிக் டன் வரை இருக்க வேண்டும் என்றும், இதற்காக 15 இடங்களையும் மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே கழிவுகளை அகற்ற விரும்பும் பொதுமக்கள் குப்பைகளை அகற்ற 1913 என்ற எண்ணுக்கோ அல்லது நம்ம சென்னை செயலியையோ பயன்படுத்தலாம்.

இதுவே 1  டன் முதல் 10 டன் வரையிலான கட்டட கழிவுகளை அகற்ற ஒரு மெட்ரிக் டன் கழிவுக்கு ரூ.2,500 கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை முறையற்ற வகையில் கொட்டுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளது. மேலும், மழைநீர் வடிகால், திறந்தவெளி மற்றும் பொதுவெளிகளில் கழிவுகளை கொட்டினால் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கட்டடம் கட்டும்போது அல்லது பழுது பார்க்கும்போது விதிகளை மீறினால் ரூ.25,000  வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.