பாஜக – தவெக கூட்டணி? நயினார் நாகேந்திரன் சொன்ன முக்கிய தகவல்!
BJP TVK Alliance : பாஜக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் பிரதமர் மற்றும் அமித் ஷாவின் சந்திப்பிற்கு பிறகு காமாட்சி அம்மன் ஆலயத்தில் இருக்கிறேன். நாளை கோட்டையில் உங்களை சந்திக்கிறேன் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னை, ஏப்ரல் 30 : பாரதிய ஜனதா கட்சி – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி (BJP TVK Alliance) குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (nainar nagendran) கருத்து தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் பாரதிய ஜனதா கட்சி – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வருவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், “பாரதிய ஜனதா கட்சி – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி குறித்து பேச்சு நடப்பதாக எனக்கு தெரியவில்லை.
பாஜக – தவெக கூட்டணி?
நேற்று பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தேன். அதன்பிறகு அம்மனை பார்க்க நேரடியாக வந்தேன். தற்போது உங்களை பார்க்கிறேன். நாளை கோட்டையில் சந்திப்போம்” என்று கூறினார். திராவிட மாடல் அரசு 2.0 லோட்டிங் என்று முதல்வர் ஸ்டாலினின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், “திமுக ஆட்சியின் முடிவு நெருங்கிவிட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருந்தாலும், ஆளும் கட்சி ஏற்கனவே தனது பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டதாக தெரிகிறது. ஆனால் இறுதியில், ஆட்சியின் போக்கைத் தீர்மானிப்பது தமிழக மக்களே” என்று கூறினார்.
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார், “சிறந்த நடிகருக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. இந்த ஆண்டு அஜித் குமாருடன் சேர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு பிரபலங்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
நயினார் நாகேந்திரன் சொன்ன முக்கிய தகவல்
பிரதமர் மோடியும் பாஜகவும் எப்போதும் சத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கிய நபர்களை மதித்து அங்கீகரித்துள்ளனர். இத்தகைய சிறந்த திறமையாளர்களையும் தேசபக்தர்களையும் கௌரவிப்பதில் பாஜக பெருமை கொள்கிறது” என்று கூறினார்.
கடந்த சில நாட்களாகவே, பாஜக தமிழக வெற்றிக் கழக கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த சூழலில் தான், தனக்கு இதுபற்றி தெரியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளதால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது. திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அண்மையில் தான் அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது.
அதைத் தொடர்ந்து மீதமுள்ள தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும், நாதக எப்போதும் போன்றே தனித்தே களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது களத்தில் புதிதாக குதித்துள்ள தவெக என்ன முடிவை எடுக்கும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.