விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. சிலைகள் கரைக்க புதிய விதிமுறைகள்..
Vinayagar Chathurthi 2025: விநாயகர் சதுர்த்தி வரும் 2025 ஆகஸ்ட் 27 அன்று கொண்டாடப்படும் நிலையில், நீர்நிலைகளில் சிலைகள் கரைக்க களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரசாயனம் கலந்த எந்த பொருளும் பயன்படுத்தக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் 27, 2025 அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி என்பது தமிழர்களின் மிக முக்கிய பண்டிகை ஆகும். அன்றைய நாளில் வீட்டில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து கொழுக்கட்டை, மோதகம், சுண்டல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நெய்வேதியமாக வைத்து வீட்டில் சிறப்பு வழிபாடு மேற்கொள்வார்கள். அதனை தொடர்ந்து அந்த விநாயகர் சிலையை ஆற்றங்கரையோரம் அல்லது கடற்கரையில் அல்லது நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இது ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2025 ஆகஸ்டு 27ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலையை கரைப்பதற்கு ஒரு சில விடுமுறைகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக நீர் நிலைகளில் கரைக்கும் போது களிமண்ணால் செய்த விநாயகர் சிலையை மட்டுமே கரைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களிமண்ணை மட்டுமே பயன்படுத்த வேண்டும்:
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் மாசுபடாத வகையிலும் சில முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிடப்பட்டுள்ளது. விநாயகர் சிலையை செய்ய களிமண், வைக்கோள் மற்றும் மக்கக்கூடிய இயற்கை மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டர் ஆப் பிளாஸ்டிக், தர்மாகூல், பிளாஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. சிலைகளை பளபளப்பாக தோற்றத்தைக் கொடுக்க மரங்களில் இருந்து கிடைக்கக்கூடிய இயற்கையான பிசின்களை பயன்படுத்தலாம். சிலைகளை அலங்கரிப்பதற்காக உலர்ந்த மலர்கள், மலர் கூறுகள் மற்றும் வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க: குளிர்சாதன மின்சார பேருந்துகள்.. 11 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு..
ரசாயனம் கலந்த வண்ணப்பூச்சுகளுக்கு தடை: .
அதேசமயம் சிலைகளுக்கு வர்ணம் பூச நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் கலந்த எண்ணெய், வண்ண பூச்சுகள், எனாமல் மற்றும் செயற்கை சாயங்கள் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக நீர் சார்ந்த மக்கக்கூடிய நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதேபோல் மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 80 வயது முதியவருக்கு பேஸ்புக்கில் ஸ்கெட்ச்.. ரூ.9 கோடி அபேஸ்!
அந்த வகையில் சென்னையை பொறுத்த வரையில் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் பொதுவாக இந்த சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி 27 ஆகஸ்ட் 2025 அன்று கொண்டாடப்பட இருக்கும் நிலையில் மூன்று நாள் கழித்து அதாவது ஆகஸ்ட் 30 2025 முதல் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.