அண்ணாமலை மாற்றம் செய்யப்பட்டதற்கு இது தான் காரணமா? அடுத்த பொறுப்பு என்ன?

Annamalai: பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை நீக்கம் செய்யப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அண்ணாமலை தேசிய அளவிலான பணிகளுக்கு பயன்படுத்தப்படுவார் என கூறப்படும் நிலையில் மத்திய இணை அமைச்சர் அல்லது ஆளுநர் பதவி வழங்கப்படும் என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அண்ணாமலை மாற்றம் செய்யப்பட்டதற்கு இது தான் காரணமா? அடுத்த பொறுப்பு என்ன?

அண்ணாமலை

Published: 

11 Apr 2025 20:44 PM

சென்னை, ஏப்ரல் 11: தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்த மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. இன்று (ஏப்ரல் 11, 2025) பாஜக மாநில தலைவர் பதவிக்கு புதிதாக நயினார் நாகேந்திரன் நியமித்து மத்திய உள்துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார். மேலும் இதற்கு முன்னதாக இருந்த அண்ணாமலை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் தேசிய அளவிலான பணிகளுக்கு பயன்படுத்தப்படுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை மாற்றப்பட்டதற்கு இது தான் காரணமா?

பாரதிய ஜனதா கட்சியில் இதுவரை 13 மாநிலத் தலைவர்கள் தமிழகத்தில் பதவி வகித்து வந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை நியமனம் செயப்பட்டார். அதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலை பாஜக, அண்ணாமலை தலைமையில் சந்தித்தது. ஆனால் அதில் ஒரு இடம் கூட பாஜகவால் வெல்ல முடியவில்லை. மேலும் அண்ணாமலையின் செயல்பாட்டில் கட்சி தலைவர்களுக்கு திருப்தி இல்லை என்றும் கருத்து நிலவி வந்தது.

பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்த போதும் அண்ணாமலை கூட்டணி கட்சியை மதிக்காமல், கருத்துக்களை தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது தெரிந்த விஷயமே. இதன் காரணமாக தான் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து டெல்லியில் இருக்கும் தலைமையிடம் அவ்வப்போது விசாரித்து வந்தனர். இதற்காக அண்ணாமலை டெல்லிக்கு பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி சுமார் 10 தினங்களுக்கு முன் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சரியான நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை என்பதால் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றம் செய்யப்படுவார் என பேச்சுக்கள் அடிப்பட்டது. அதேபோல், அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்றால், அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இருக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி கண்டிஷன் போட்டதாக அரசியல் விமர்சகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11, 2025) பாஜக மாநிலத்தின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை பதவியேற்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (ஏப்ரல் 11, 2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம்பெறும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலைக்கு வழங்கப்படும் பொறுப்பு:

பாஜகவில் தற்போது வரை 13 பேர் மாநில தலைவராக பொறுப்பு வகித்துள்ளனர். அண்ணாமலைக்கு முன் பாஜக மாநிலத் தலைவராக எல். முருகன் பதவி வகித்து வந்தார். பின்னர் அவர் மாற்றம் செய்யப்பட்டு தற்போது அவர் மத்திய இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அதேபோல் மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தராஜன் தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வந்தார். மேலும், பாஜகவின் சி.பி ராதாகிருஷ்ணன் மற்றும் இல. கணேசன் ஆளுநர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தேசிய அளவிலான பணிகளுக்கு பயன்படுத்தப்படுவார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். எனவே, அடுத்து அண்ணாமலைக்கு மத்திய இணை அமைச்சர் அல்லது ஆளுநர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.