அமித்ஷா கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவார்.. அண்ணாமலை தகவல்!
Annamalai About Amit Shah's Chennai Visit | பாஜக தமிழக தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (ஏப்ரல் 11, 2025) நடைபெற உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார். அவரது வருகை பாஜக மீதான கவனத்தை அதிகரித்துள்ள நிலையில், அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல் 11 : தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) தலைவர் நியமனத்துக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷா (Home Minister Amit Shah) வருகைக்கும் சம்பந்தமில்லை என்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை சந்தித்து தமிழக அரசு நிலவரங்களை அமைச்சா கேட்டறிவார் என்றும் தற்போதைய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவராக உள்ள அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் வருகையால் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அமித்ஷா வருகை குறித்து அண்ணாமலை பேசியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையும், பாஜக முன்னாள் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி ஆனந்தன் வயது மூப்பு காரணமாக உயிர் இழந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் வீட்டுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (ஏப்ரல் 10, 2025) சென்று இருந்தார். தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசி அண்ணாமலை, சென்னை வரும் மத்திய அமைச்சர் அமைச்சர் ஏப்ரல் 11, 2025 மாலை வரை சென்னையில் இருப்பார் என்றும் அவர் எதற்காக சென்னை வந்துள்ளார் என்பதை செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று கூறியுள்ளார். மாநிலத் தலைவர் நியமனத்துக்கும், அமித்ஷாவின் வருகைக்கும் சம்பந்தமில்லை. கட்சியின் தலைவர்களை சந்திப்பதற்காக தான் அமைச்சர் வருகிறார். மேலும் கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து தமிழகத்தின் அரசியல் நிலவரங்களை கேட்டு தெரிந்து கொள்வார் இது வழக்கமான ஒன்றுதான் என்றுன் அண்ணாமலை கூறியுள்ளார்.
நீட் தேர்வு மாணவர்களுக்கு நல்லதை தான் செய்கிறது – அண்ணாமலை
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வு மாணவர்களுக்கு நல்லதை தான் செய்து வருவதாகவும், பின் தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவர்கள், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள், என பலர் நீட் தேர்வு மூலமாக அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நீர் விவாதம் என்பது தேவையற்றது என்று கூறியுள்ளார். பின்னர் பாமக விவகாரம் குறித்து பேசிய அண்ணாமலை, பாமகவில் நடப்பது அவர்களது உட்கட்சி விவகாரம், அதைப்பற்றி பாஜக கருத்து கூறுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியை ராமதாஸ் வலுப்படுத்துவார் என்றும் தொடர்ந்து அவர் மக்களுக்காக உழைப்பார் என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.