அம்பேத்கர் பிறந்த நாள்.. ரூ.332 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் முதல்வர்!
Ambedkar Jayanti 2025 | சட்டமேதை அம்பேத்கரின் 135வது பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 14, 2025) தமிழ்நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் ரூ.332 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

சென்னை, ஏப்ரல் 14 : சட்டமேதை அம்பேத்கரின் (Ambedkar) பிறந்த நாளான இன்று (ஏப்ரல் 14, 2025) சுமார் ரூ. 332.60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற உள்ள சமத்துவ நாள் விழாவில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிலையில், அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாட தமிழகத்தில் எத்தகைய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இந்த நலத்திட்ட உதவிகளின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள அம்பேத்கர் ஜெயந்தி
இந்திய அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கிய அம்பேதகரின் பிறந்த நாள் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் அம்பேத்கர் தலைசிறந்த தலைவராக கருதப்படுவதால் அவரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அனைவரும் சமாம வாழ வேண்டும் என்ற நோக்கில் அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேதகருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரது பிறந்த நாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அரசியல் சார்பு உடையவர்கள் மட்டுமன்றி சாமானியர்களும் கொண்டாடும் ஒரு தலைவராக அம்பேத்கர் விளங்குகிறார். இந்த நிலையில், அவரின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சுமார் ரூ.332 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு எக்ஸ் பதிவு
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான சமத்துவ நாளையொட்டி ரூ.332.60 கோடியில் நலத்திட்ட உதவிகள்!
எம்.சி.இராஜா கல்லூரிக்கு புதிய விடுதிக் கட்டடம்!
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை திறந்து வைக்கிறார்.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/sBhpGlKOC1
— TN DIPR (@TNDIPRNEWS) April 13, 2025
ரூ.332 கோடியில் நலத்திட்ட உதவிகள்
அம்பேத்கர் பிறந்த நாளான இன்று (ஏப்ரல் 14, 2025) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடியில் மொத்தம் பத்து தளங்களுடன் கூடிய 484 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதி கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.
அதனை தொடர்ந்து ரூ.227 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாண மாணவிகளுக்கான 18 விடுதிகள், 46 பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடுகள், 19 சமுதாய நலக்கூடங்கள், 22 கல்லூரி விடுதிகளில் கற்றல் கற்பித்தல் கூடம் மற்றும் 1,000 பழங்குடியினர் குடியிருப்புகள் ஆகியவற்றை அம்பேத்கர் பிறந்த நாளில் சிறப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.