Marudhu Alaguraj: தேசமே கண்ணீர்.. விருந்தை தவிர்க்காதது ஏன்..? எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த மருது அழகுராஜ்!

AIADMK MLAs Dinner: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடத்திய ரகசிய ஆலோசனைக்குப் பின்னர் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டணி அதிமுக எம்எல்ஏக்கள் பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏக்களுக்கு விருந்து அளித்து சமாதானம் செய்துள்ளார். இந்த நிகழ்வு பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது.

Marudhu Alaguraj: தேசமே கண்ணீர்.. விருந்தை தவிர்க்காதது ஏன்..? எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த மருது அழகுராஜ்!

மருது அழகுராஜ் - எடப்பாடி பழனிசாமி

Published: 

24 Apr 2025 08:16 AM

சென்னை, ஏப்ரல் 24: பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்கமாட்டோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami), உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் (Amit shah) நடத்திய ரகசிய ஆலோசனைக்கு பிறகு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். இது தமிழக மக்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த அதிமுகவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் (2026 Assembly Elections) ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தை வீழ்த்தும் வகையில் பாஜக – அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்தநிலையில், அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்தது அதிமுக எம்.எல்.ஏக்கள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இவர்களை சமாதானம் செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தை அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு நேற்று (23.04.2025) விருந்தளித்தார்.

மருது அழகுராஜ் விமர்சனம்:

இந்த விருந்து குறித்து அதிமுகவின் நமது அம்மா நாளிதழின் அதிகாரப்பூர்வ ஆசிரியராக இருந்தவரும், ஓபிஎஸ் ஆதரவளருமான மருது அழகுராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “#கொடுஞ்செயலும்
#கொண்டாட்டமும்

தேசத்தையே கண்ணீரில் மூழ்க வைத்த கதறல் ஒலி உலகையே உலுக்கியுள்ள நாளில்..

முதலமைச்சராக இருந்தவர் இன்று எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர்
தேசியக்கொடி
கட்டிய காரில் பயணிப்பவர்

எடப்பாடி தனது
விருந்து கொண்டாட்டத்தை தவிர்த்திருக்க வேண்டும் .

குறைந்த பட்சம் அதனை
தள்ளிவைத்திருக்க வேண்டும்..

என்ன நாஞ்
சொல்றது..

என பதிவிட்டுள்ளார்.

விருந்தில் என்னென்ன உணவுகள் பரிமாறப்பட்டது..?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொடுத்த விருந்தில் மட்டன் பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் பிரியாணி, முட்டை, மட்டன் சுக்கா, இறால் தொக்கு போன்ற அசைவ உணவுகள் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், சைவ உணவுகளை சாப்பிடும் எம்.எல்.ஏக்களுக்கு இட்லி, இடியாப்பம், தோசை, சப்பாத்தி,காலிபிளவர் போன்றவை பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.

விருந்தில் யார் யார் பங்கேற்பு..?

பசுமைவழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் வழங்கப்பட்ட விருந்தில் அதிமுக எம்பிக்களான தம்பிதுரை, சி.வி.சண்முகம் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, பொன்னையன், தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட பல முக்கிய அதிமுக ஏல்.எல்.ஏக்கள் 75 பேரும், அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேநேரத்தில் செங்கோட்டையன் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்கள் இந்த விருந்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.