AIADMK MLA Dinner: மீண்டும் அதிமுகவில் உட்கட்சி பூசலா..? எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்து.. புறக்கணித்த செங்கோட்டையன்!
Edappadi Palaniswami: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிறப்பு விருந்து அளித்தார். பாஜக கூட்டணி குறித்த கருத்து வேறுபாடுகளின் பின்னணியில், இந்த விருந்து கட்சி ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது. செங்கோட்டையன் விருந்தில் கலந்து கொள்ளாதது உட்கட்சிப் பதற்றத்தை எடுத்துரைக்கிறது. விருந்தில் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

சென்னை, ஏப்ரல் 23: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் வெற்றி பெறுவதற்காக முக்கிய வியூகங்களை வகுத்து வருகின்றனர். சமீபத்தில், அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK) மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) கூட்டணி அமைத்தது. மீண்டும் இந்த கூட்டணி அமையாது என்று எதிர்பாராதபோது, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டு பிரச்சனைக்கு முடிவு கட்டினார். தொடர்ந்து இரு கட்சிகளும் இணைந்து தமிழ்நாட்டில் ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தை வீழ்த்தி ஆட்சி அமைக்க திட்டம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்தது அதிமுக எம்.எல்.ஏக்கள் பலருக்கும் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) இன்று அதாவது 2025 ஏப்ரல் 23ம் தேதி சிறப்பு விருந்தை ஏற்பாடு செய்துள்ளார்.
சிறப்பு விருந்து:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் இரவு விருந்து ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு 7 வகையான அசைவ உணவுகள் ஏற்பாடு செய்துள்ளார். அதேநேரத்தில். சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடும் ஒரு சில எம்.எல்.ஏக்களுக்கு தடபுடாலான சைவ உணவுகளும் வந்து இறங்கியுள்ளது. இந்த விருந்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செங்கோட்டையன் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
உட்கட்சி மோதல்:
Pic of the day ❤️❤️❤️
Edappadi K. Palaniswami pic.twitter.com/JMpaYAyjfm
— magesh .n (@magesh_n1991) April 23, 2025
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதற்கு முன்பாக செங்கோட்டையன், கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டங்களில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். தொடர்ந்து, செங்கோட்டையன் தனியாக டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து வந்தபிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்ததுடன், மத்திய அமைச்சர்களை சந்தித்ததாக கூறப்பட்டது. அதன்பிறகு, ஒரு சில கூட்டங்களில் பங்கேற்காமல் வந்த செங்கோட்டையன், சமீபத்தில் நடந்த ஒரு கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசி வந்தார். இதனால், எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் இடையேயான மனக்கசப்பு தீர்ந்ததாக பேசப்பட்டது. இந்தநிலையில், மீண்டும் எடப்பாடி பழனிசாமி அளித்த ஒரு விருந்தில் செங்கோட்டை பங்கேற்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்த எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு..?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளிக்கும் விருந்தில் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, தங்கமணி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.