மே 2ல் கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.. திட்டம் என்ன?
Edappadi Palanisamy: பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே, 2025 மே 2ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் கூடுவதக அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதிமுக பாஜக கூட்டணி வைத்த நிலையில், செயற்குழு கூட்டம் நடைபெறுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
சென்னை, ஏப்ரல் 15: 2025 மே 2ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக) செயற்குழு கூட்டம் நடைபெறும் என கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மே 2ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
மே 2ல் கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுகள் அடிபடுகிறது. திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், பாஜக அதிமுக கூட்டணி வைத்து அறிவிப்பை வெளியிட்டது.
பாஜகவுடன் கூட்டணியே இல்லை என 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் கூட்டணி வைத்துள்ளார். இதனால், கட்சிக்குள்ளே சில தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
அதே நேரத்தில், கூட்டணி வைத்ததால், எடப்பாடி பழனிசாமிக்கு சில சிக்கல்களும் இருக்கலாம். அதாவது, தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை, நீட் விலக்கு உள்ளிட்ட மாநில பிரச்னைகள் குறித்து எழுப்ப எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் இருக்கலாம்.
திட்டம் என்ன?
02.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று கழக செயற்குழு கூட்டம்!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. pic.twitter.com/vMR65pDMly
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) April 15, 2025
கூட்டணி வைத்ததால் தன்னுடைய நிலைப்பாட்டை எப்படி தெரிவிப்பார் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த சூழலில் தான், 2025 மே 2ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில், ” “அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் மே 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை 4.30 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், பிற மாநில கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
உறுப்பினர்கள் அனைவரும் தவறால் கலந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கூட்டணி விவகாரம், கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும், முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதாக தெரிகிறது.