பள்ளியில் மாணவருக்கு அரிவாள் வெட்டு.. கத்தியுடன் சரணடைந்த சக மாணவன்.. நெல்லையில் பயங்கரம்!
Tirunelveli Crime News : திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவனை, சக மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க வந்த ஆசிரியரையும், அந்த மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை அடுத்து, அந்த மாணவன் அரிவாளுடன் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

மாணவனுக்கு அரிவாள் வெட்டு
திருநெல்வேலி, ஏப்ரல் 15: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 8ஆம் வகுப்பை சேர்ந்த இரு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. சக மாணவரை இந்த கொடூர செயலில் ஈடுபட்டது அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வழக்கம்போல் மாணவர்கள் 2025 ஏப்ரல் 15ஆம் தேதியான இன்று பள்ளிக்கு வந்துள்ளனர்.
பள்ளியில் மாணவருக்கு அரிவாள் வெட்டு
அப்போது, பள்ளி வளாகத்தில் 8ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதத்தில் மாணவர் ஒருவரை, சக மாணவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை பார்த்த ஆசிரியர் ஒருவர் தடுக்க முயன்றுள்ளார்.
அப்போது, அவரையும் அந்த மாணவர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், மாணவர் மற்றும் ஆசிரியருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. சக மாணவனை வெட்டிய 8ஆம் வகுப்பு மாணவன் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை கிளப்பியுள்ளது.
இதனை அடுத்து, போலீசார் அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த, ஆசிரியர் மற்றும் 8ஆம் வகுப்பு மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கத்தியுடன் சரணடைந்த சக மாணவன்
தற்போது மாணவர் நலமுடன் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், முதற்கட்ட விசாரணையில், இரு மாணவர்களும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், 2025 ஏப்ரல் 15ஆம் தேதியான இன்று பேனா, பென்சில் தொடர்பான தகராறில் ஒரு மாணவன் தான் கொண்டு வந்த அரிவாளால் மற்றொரு மாணவனை வெட்டியுள்ளான் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், படிக்கும் வயதில் பள்ளிக்கு அரிவாளுடன் வந்து, மாணவரை வெட்டியது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக நெல்லை உட்பட தென்மாவட்டங்களில் சமீப காலங்களில் கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன.
2025 ஏப்ரல் 14ஆம் தேதி நேற்று கூட தூத்துக்குடியில் காவலரின் தாயார் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், நெல்லையில் 2025 ஏப்ரல் 15ஆம் தேதியான இன்று மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளது தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.