Rohit Sharma: பேட்டிங்கில் சொதப்பும் ரோகித் சர்மா.. கவலைப்படாத பயிற்சியாளர்!
வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் அமரும் ஒரு பகுதிக்கு ரோஹித் சர்மாவின் பெயர் சூட்டப்பட்டது. இதில் அவரது பயிற்சியாளர் தினேஷ் லாட் பெருமிதம் தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவின் பேட்டிங் திறமையைப் பற்றிய விமர்சனங்களைப் பற்றியும், அவர் 12 வயதில் பந்துவீச்சாளராக இருந்ததது பற்றியும் பேசியுள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் (Wankhede Stadium) உள்ள ரசிகர்கள் அமரும் பகுதி ஒன்றிற்கு ரோகித் சர்மா (Rohit Sharma) பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு அவரது பயிற்சியாளர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் சாதிக்கும் வீரர்களின் பெயரை விளையாட்டு மைதானங்களில் ரசிகர்கள் அமரும் பகுதிக்கு சூட்டப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி ஆகிய இரண்டையும் இந்திய அணி வென்றது. இப்படியான நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கம் வான்கடே மைதானத்தில் உள்ள ரசிகர்கள் அமரும் ஒரு பகுதிக்கு ரோகித் சர்மாவின் பெயரை அதிகாரப்பூர்வமாக சூட்டியுள்ளது. இது கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அந்த மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், திலீப் வெங்கர்ச்சார் மற்றும் விஜய் மெர்ச்சன்ட் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு பெவிலியன் உள்ளது.
இந்த நிலையில் மும்பையால் உருவாக்கப்பட்ட மிகவும் திறமையான கிரிக்கெட் வீரர்களின் ஒருவரான ரோகித் சர்மாவை பெருமைப்படுத்தும் வகையில் அவரது பெயரானது வான்கடே மைதானத்தில் பெவிலியனுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த தருணம் தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ரோகித் சர்மாவின் பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளார்.
ரோகித் பேட்ஸ்மேனாக வரவில்லை
இது தொடர்பாக அவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “வான்கடே மைதானத்தின் வரலாற்றில் எனது மாணவரின் (ரோகித் சர்மா) பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.. 12 வயது சிறுவனாக அவர் வந்த போது ஒரு பந்துவீச்சாளராகத்தான் நான் ரோகித்தை பார்த்தேன். ஆனால் அவரை பேட்டிங்கில் ஊக்குவித்தேன். ஒருவேளை அவரிடம் திறமை இருந்தும் பேட்டிங் ஸ்டைலை பார்க்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அதிக கவனம் பேட்டிங்கில் செலுத்த சொல்லி இருக்க முடியாது.
அந்த முடிவு எடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொள்கிறேன். வான்கடேவில் அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதைக் கண்டு நான் மிகவும் திருப்தி அடைகிறேன். இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம்” என தெரிவித்துள்ளார்.
பேட்டிங் பற்றி கவலையில்லை
அதே சமயம் சமீப காலமாக ரோகித் சர்மாவின் பேட்டிங் திறமை மிகப்பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அவர் ரன்குவிக்க தொடர்ந்து தடுமாறி வருகிறார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, “டி20 கிரிக்கெட் பொருத்தவரை யார் எப்போது எப்படி விளையாடுவார்கள் என்பதை கணிக்க முடியாது. ரோகித் சர்மா ஒரு நாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் ரன் எடுக்க தவறினால் நான் கவலைப்படலாம். ஆனால் இது ஐபிஎல் என்பதால் எனக்கு எந்த கவலையும் கிடையாது” என தினேஷ் லாட் கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோகித் சர்மா 56 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.