IPL 2025: இந்திய வீரர்களை புறக்கணிக்கிறார்.. ரிக்கி பாண்டிங் மீது குற்றச்சாட்டு!
ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மீது முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இந்திய வீரர்கள் மீதான அவர் வைத்துள்ள நம்பிக்கையின்மை காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணி சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லாது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மனோஜ் திவாரி - ரிக்கி பாண்டிங்
ஐபிஎல் தொடரில் (IPl 2025) பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி வெற்றிக்கரமாக நடந்து வருகிறது. எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய போகிறார்கள் என தெரியாத அளவுக்கு ஒவ்வொரு நாளும் போட்டிகள் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 2025, ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் பஞ்சாப் அணி முதலில் விளையாடி 201 ரன்கள் குவித்தது. இரண்டாவதாக பேட் செய்ய கொல்கத்தா வந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டியானது ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இப்படியான நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் மீது மனோஜ் திவாரி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி நிச்சயமாக ஐபிஎல் 2025 பட்டத்தை வெல்லாது என்று நம்புவதாக கூறினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியின் போது, பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரின் அற்புதமான தொடக்கத்திற்குப் பிறகு பஞ்சாப் அணி பேட்டிங் வரிசையில் மாற்றம் மேற்கொண்டது.
மனோஜ் திவாரி குற்றச்சாட்டு
My gut feeling says that punjab team will not be able to win the #IPL trophy this season because what I saw today when they were batting was, the coach didn’t send Indian inform batters Nehal wadera and Shasank singh, instead he trusted his foreign players to deliver, but they…
— MANOJ TIWARY (@tiwarymanoj) April 26, 2025
அதன்படி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 3வதாக இறங்கிய பிறகு நேஹல் வதேரா மற்றும் ஷஷாங்க் சிங் ஆகியோர் வருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் கிளென் மேக்ஸ்வெல்லை 4வது இடத்திலும், மார்கோ ஜான்சனை 5வது இடத்திலும் அனுப்ப பஞ்சாப் அணி நிர்வாகம் முடிவு செய்தது.
இந்நிலையில், “பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வெளிநாட்டு பேட்ஸ்மேன்களை நம்பும் நிலையில் இந்திய வீரர்களின் திறமைகளை நம்பவில்லை. இதன் காரணமாக அவரின் திட்டம் அணிக்கு பலனளிக்கவில்லை” என்றும் மனோஜ் திவாரி கூறினார். மேலும், “இந்திய வீரர்கள் மீது தொடர்ந்து நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தினால் இந்த ஆண்டு பஞ்சாப் அணி பட்டத்தை வெல்லாது. இப்படியே சென்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் தகுதி பெற்றிருந்தாலும் சாம்பியன் கோப்பை பஞ்சாப் அணிக்கு எட்டாக்கனியாகவே இருக்கும்” எனவும் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.