IPL 2025: சூப்பர் ஓவரால் பரபரப்பு – ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் திரில் வெற்றி
IPL 2025: RR vs DC : டெல்லி கேப்பிடல்ஸ்க்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சரியாக 188 ரன்கள் எடுக்க போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் ஹெட்மயர் மற்றும் ரியான் பராக்கை களமிறக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்த தவறான முடிவால் டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் (IPL) 2025 தொடரின் 32வது லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 2 வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) அணியும் 8 வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியும் மோதுகின்றன. தொடர் வெற்றிபெற்றுவந்த டெல்லி அணி கடைசி போட்டியில் மும்பையிடம் போராடி தோற்றது. அதே போல தொடர் தோல்விகளில் இருக்கும் ராஜஸ்தான் அணி வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயஸ்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளுக்கு 188 ரன்கள் எடுத்தனர். அந்த அணியின் மெக்கர்க் 6 பந்துகளில் வெறும் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த கருண் நாயர் ரன்கள் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் போனாலும் அபிஷேக் பொரேல் அதிரடியாக ஆடினார். அவருக்கு கே.எல்.ராகுல் கைகொடுத்தார். இதனால் அந்த அணி சரிவிலிருந்து மீண்டது.
இந்த நிலையில் கேஎல் ராகுல் 32 பந்துகளில் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடித்து 38 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பந்து வீச்சில் அவுட்டானார். மறுபக்கம் நிதானமாக ஆடிய போரெல் 49 பந்துகளில் 1 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் ஹசரங்கா பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். போரெலுக்கு 1 ரன்னில் அவர் 50 அடிக்கும் வாய்ப்பு பறிபோனது. அதன் பிறகு திரிஸ்டன் ஸ்டப்ஸும், அக்சர் படேலும் ஆளுக்கு தலா 34 ரன்கள் அடிக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 188 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பாக ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும் தீக்சனா மற்றும் ஹசரங்கா தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
இதனையடுத்து ராஜஸ்தான் ராயல் சார்பாக களமிறங்கிய யஷ்சஸ்வி ஜெய்ஸ்வாலும் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சனும் சிறப்பான துவக்கம் தந்தனர். ஜெய்ஸ்வால் 37 பந்துகளில் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என 51 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் வெளியேறினார் அப்போது அவர் 19 பந்துகளில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என 31 ரன்கள் எடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரியான் பராக் 9 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். பின்பு களமிறங்கிய நித்திஸ் ராணா 28 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் எடுத்து மிட்செல் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார்.
திகில் கிளப்பிய கடைசி ஓவர்
கடைசி கட்டத்தில் ஆட்டம் பரபரப்பாக சென்றது. மிட்செல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுக்க வேண்டும். இதனையடுத்து முதல் இரு பந்துகளில் தலா 1 ரன்களும் அடுத்த இரு பந்துகளில் தலா 2 ரன்களும் எடுக்கப்பட்டது. 5வது பந்தில் ஹெட்மயர் 1 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி 1 ரன் எடுத்தால் டிரா என்ற போது ஆட்டம் பரபரப்பானது. ஸ்டார்க வீசிய கடைசி பந்தில் துருவ் எதிர்கொண்டு 1 ரன்கள் எடுத்தார் பின்னர் 2 ரன் ஓட முயன்ற போது அவுட்டானார். இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
சூப்பர் ஓவரால் ஏற்பட்ட பரபரப்பு
சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பா ஹெட்மயர் மற்றும் ரியான் பராக் களமிறங்கினர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பாக மிட்செல் ஸ்டார்க் பந்து வீசினார். இதனையடுத்து ஹெட்மயர் 6 ரன்களும் பிரயான் 4 ரன்களும் எடுத்தனர். ஒரு நோபால் வீசப்பட்டது. 5 வது பந்தில் ரியான் பராக் ரன் அவுட்டாகி வெளியேற அவருக்கு பதிலாக களமிறங்கிய ஜெய்ஸ்வாலும் சிங்கிள் ஓட முயன்று ரன் அவுட்டானார். இதனையடுத்து அந்த அணி 0.5 ஓவரில் 11 ரன்கள் எடுத்தது. 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் சார்பாக ஸ்டப்ஸ் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பாக சந்தீப் சர்மா பந்துவீசினார். இருவரும் அதிரடியாக ஆடி 0.4 பந்துகளிலேயே இலக்கை அடைந்தனர். இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது.