Rahul Dravid: சூர்யவன்ஷி அதிரடி.. காலில் காயத்தை மறந்து கொண்டாடிய டிராவிட்!

IPl 2025, RR vs GT: ஐபிஎல் 2025 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி அடித்த சதத்தை கண்டு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உற்சாகமாக கொண்டாடிய வீடியோ வைரலாகியுள்ளது. 14 வயதான சூர்யவன்ஷி, 35 பந்துகளில் சதம் அடித்து ஐபிஎல் தொடரில் வரலாறு படைத்தார்.

Rahul Dravid: சூர்யவன்ஷி அதிரடி.. காலில் காயத்தை மறந்து கொண்டாடிய டிராவிட்!

வைபவ் சூர்யவன்ஷி - ராகுல் டிராவிட்

Updated On: 

29 Apr 2025 11:37 AM

ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) ஆடிய ஆட்டத்தைப் பார்த்து அந்த அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் (Rahul Dravid) கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 2025, ஏப்ரல் 28 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்று ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட குஜராத் அணியில் கேப்டன் சுப்மன் கில் 84 ரன்கள் விளாசினார். சாய் சுதர்சன் 39 ரன்கள், ஜோஸ் பட்லர் 50 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் கண்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் குஜராத் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். நாலாபுறமும் சிக்ஸரும், பவுண்டரிகளுமாக பறக்க ராஜஸ்தான் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். குறிப்பாக 14 வயது நிரம்பிய இளம் வீரரான சூர்யவன்ஷி 35 பந்துகளில் 100 ரன்களை எட்டி சாதனைப் படைத்தார்.

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்தில் சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதனிடையே வைபவ் சூர்யவன்ஷி சதமடித்ததை ராஜஸ்தான் அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

கொண்டாடிய ராகுல் டிராவிட்

பெங்களூருவில் தனது மகன்களுடன் கிரிக்கெட் விளையாடும்போது வலது காலில் காயம் ஏற்பட்டதால் ராகுல் டிராவிட் ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்து சக்கர நாற்காலியில்தான் வீரர்களின் பயிற்சியில் கலந்து கொள்கிறார். எல்லா போட்டிகளும் முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கி விடைபெறும்போது கூட டிராவிட் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு பங்கேற்றார். ஆனால் அந்த காயத்தின் வலியெல்லாம் நேற்றும் சூர்யவன்ஷி அடித்த சதம் மூலம் காணாமல் போனது.

கடந்த நவம்பரில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.1 கோடி ரூபாய்க்கு வைபவ் சூர்யவன்ஷி வாங்கப்பட்டார். அப்போது 13 வயதான அந்த வீரர் முன்னணி வீரர்களுக்கு இணையான தொகையில் ஏலம் எடுக்கப்பட்டது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. ஆனால் சூர்யவன்ஷி ரஷித் கான், முகமது சிராஜ், இஷாந்த் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட அனுபவமுள்ள சர்வதேச பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மாஸான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக இஷாந்த் சர்மாவின் ஒரு ஓவரில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி 2025 ஐபிஎல்லில் வெறும் 17 பந்துகளில் அரைசதம் எட்டிய வீரர் என்ற சிறப்பைப் பெற்றார்.