MI vs CSK: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய மும்பை.. CSK நம்பிக்கையை உடைத்த ரோஹித் – சூர்யா ஜோடி…!
IPL Match 38 Highlights: ஐபிஎல் 2025ன் 38வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த சென்னை 176 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (53) மற்றும் துபே (50) சிறப்பாக விளையாடினர். மறுபக்கம், ரோஹித் சர்மா (76) மற்றும் சூர்யகுமார் யாதவ் (68) அபார ஆட்டத்தால் மும்பை இலக்கை எளிதாக எட்டியது. இந்த வெற்றியுடன் மும்பை அட்டவணையில் முன்னேறியது.

ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ்
ஐபிஎல் 2025ன் (IPL 2025) 38வது போட்டியில் 2025 ஏப்ரல் 20ம் தேதியான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (Chennai Super Kings), மும்பை இந்தியன்ஸ் அணியும் (Mumbai Indians) மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. சென்னையில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளில் 53 ரன்களும், ஷிவம் துஏ 32 பந்துகளில் 50 ரன்களும் எடுத்திருந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகளும், தீபக் சாஹர், அஷ்வினி குமார் மற்றும் சாண்ட்னர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
177 ரன்கள் இலக்கு:
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். முதல் ஓவர் வீசிய கலீல் அகமது பந்தில் ரியான் ரிக்கல்டன் 2 பவுண்டரிகளை விரட்டி, அதிரடி காட்டினார். தொடர்ந்து, ஓவர்டன் வீசிய 2வது ஓவரில் ரோஹித் சர்மா சிக்ஸர் அடித்து தனது இன்னிங்ஸை தொடங்கினார். இதன்பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்களால் ரோஹித் சர்மாவை கட்டுப்படுத்த முடியவில்லை.
இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில் 56 ரன்களை கடந்தது. அப்போது, ரோஹித் சர்மா 32 ரன்களுடனும், ரியான் ரிக்கல்டன் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 7வது ஓவர் வீசிய ரவீந்திர ஜடேஜா மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். ரியான் ரிக்கல்டன் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆயுஸ் மத்ரேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரியான் ஏன் அவுட்டானார் என்று ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு சூர்யகுமார் யாதவ் களமிறங்கியது முதலே சம்பவம் செய்தார்.
ரோஹித் – சூர்யா ஜோடி:
दादा ची बैठक 😍#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #MIvCSK pic.twitter.com/oKd4gHOOyx
— Mumbai Indians (@mipaltan) April 20, 2025
அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா பார்ம் அவுட்டில் இருந்து வெளியே வந்து ஐபிஎல் 2025ல் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்ய, சூர்யகுமார் யாதவும் தன் பங்கிற்கு 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். அப்போது, மும்பை அணி 150 ரன்களை கடந்து, 15 ஓவர்கள் முடிவில் வெற்றிக்கு 20 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. பதிரனா வீசிய 16வது ஓவரில் ரோஹித் சர்மா ஒரு சிக்ஸரை விட, சூர்யகுமார் யாதவும் அதே ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விட்டு மும்பை அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவி செய்தார்.
ரோஹித் சர்மா 45 பந்துகளில் 76 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் 68 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.