Priyansh Arya: மின்னல் வேக ஆட்டம்.. கிரிக்கெட் உலகில் பேசுபொருளான பிரியான்ஷ் ஆர்யா
ஐபிஎல் 2025-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 42 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து அசத்தினார். இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு அறிமுக வீரரின் வேகமான சதமாகும். அவரது அற்புதமான ஆட்டம் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஐபிஎல் தொடரில் (IPL 2025) சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கெதிராக விளையாடி அதிரடியாக சதம் அடித்த இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா (Priyansh Arya) பற்றிய பேச்சுதான் கிரிக்கெட் உலகில் நடந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் நேற்று (2025, ஏப்ரல் 8) நடைபெற்ற ஆட்டத்தில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
இதனிடையே பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய வந்தபோது அதிரடியாக விளையாடினாலும் மறுபக்கம் விக்கெட்டுகளும் வீழ்ந்த வண்ணம் இருந்தது. 83 ரன்களுக்கு அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 150 கூட வருமா என்ற கேள்வி எழுந்தது. அப்போது 8 ஓவர்கள் தான் முடிவடைந்திருந்தது. ஆனால் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா எதிர்பாராதவிதமாக அசுரத்தனமாக ஆடினார்.
42 பந்துகளில் 7 பவுண்டரி, 9 சிக்ஸர்களுடன் சதம் விளாசிய அவர் இறுதியாக 103 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரின் அதிரடி ஆட்டம் பஞ்சாப் அணி எதிர்பாராத இலக்கை எட்ட உதவியது. இந்த நிலையில் பிரயான்ஷ் ஆர்யா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.
24 வயதான பிரியான்ஷ் ஆர்யா ஆடும் லெவனில் சேர்ப்பதற்கு நிர்வாகத்திற்கு பயிற்சி ஆட்டத்தின் போது அவர் எதிர்கொண்ட சில பந்துகள் மட்டுமே தேவைப்பட்டது என அணியின் உதவி பயிற்சியாளர் பிராட் ஹாடின் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடருக்கு முன்பு ஒரு பயிற்சி ஆட்டத்தில் அவர் சுமார் 8 பந்துகள் மட்டுமே விளையாடினார். பிரயான்ஷ் ஆர்யா போட்டியில் விளையாட வேண்டும் என்று முடிவெடுக்க அதுவே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது என அவர் கூறினார்.
பிரியான்ஷ் ஆர்யா படைத்த சாதனை
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை விளையாடாத வீரர் ஒருவர் அடித்த வேகமான சதம் என்ற சாதனையை பிரியான்ஷ் ஆர்யா படைத்தார். இந்த சதம் ஐபிஎல்லில் சென்னை அணிக்கு எதிராக அடித்த வேகமான சதமாகும். இந்தியாவின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூட அவரின் பேட்டிங்கை பார்த்து ஆச்சரியப்பட்டு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார்.
சஞ்சய் பரத்வாஜ் தான் பிரியான்ஷ் ஆர்யாவுக்கு பயிற்சி கொடுக்கிறார். இவர் இதற்கு முன் கௌதம் காம்பீர், நிதிஷ் ராணா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோருக்கு பயிற்சி அளித்தவர்.
பிரியான்ஷ் ஆர்யா குடும்பம்
24 வயதான பிரியான்ஷ் ஆர்யாவின் தந்தை ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராவார். டெல்லியின் அசோக் விஹாரைச் சேர்ந்த இவர், கடந்த 2024 ஆம் ஆண்டு டெல்லி பிரீமியர் லீக்கில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிராக சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக களம் கண்ட பிரியான்ஷ் ஆர்யா 10 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் என மொத்தம் 120 ரன்கள் எடுத்தார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த பின்பு அது தொடர்பாக என்னை தொடர்பு கொண்டு பேசிய பிரியான்ஷ் ஆர்யாவிடம் நேற்று என்ன நடந்தது என்று நான் கேட்டேன். அதற்கு அவன், இது கடவுள் செயல். அதனைத் தவிர வேறில்லை என்று கூறியதாக பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.